Wednesday, August 1, 2012

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்..."ஐ.ஜே.எஸ்"-ம் வருகிறதாம்...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்...இந்த வரிசையில் இப்போது வருகிறது ஐ.ஜே.எஸ். அதென்ன ஐ.ஜே.எஸ்?



ஆட்சி அதிகாரத்தில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். காவல்துறையில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள். இதேபோல வெளியுறவுத் துறைப் பணிகளுக்கு ஐஎப்எஸ், வருவாய்த் துறைக்கு ஐஆர்எஸ் என உள்ளது. இந்த வரிசையில் நீதித்துறையில் உயர்நிலைப் பொறுப்பாக ஐ.ஜே. எஸ். அதாவது இண்டியன் ஜூடிசியல் சர்வீஸ் என்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.



இது தொடர்பான வரைவை சட்ட அமைச்சகம் தயாரித்திருக்கிறது. இன்னும் ஓரிருநாளில் கூட இருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.


ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளுக்குப் போலவே அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்ந்தெடுக்கபப்டுவோர் மாவட்ட நீதிபதிகளாகவும் மேல்நீதிமன்றத்தில் உரிய பொறுப்புகளுக்கும் நியமிக்கப்படுவர். இத்தகைய நடவடிக்கை மூலம் உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றங்களிலும் இளம்வயது திறமையான நீதிபதிகள் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நடைமுறையில் மாஜிஸ்திரேட்டுகளாக பணியாற்றி பின்னர் ஒரு 10 ஆண்டுகாலம் கழித்துதான் மாவட்ட நீதிபதியாக பணியாற்ற முடியும். இந்த நிலைமையை தற்போதைய ஐ.ஜே.எஸ் முறை மாற்றும்.



இந்த ஐ.ஜே.எஸ். முறை தொடர்பாக மாநில அரசுகளுடனும் உயர்ந் நீதிமன்றங்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. 17 நீதிமன்றங்களில் 11 நீதிமன்றங்களும் 20 மாநிலங்களில் 7 மாநிலங்களும் இதற்கு ஓகே சொன்னது.


உச்சநீதிமன்றமும் கூட தேங்கிக் கிடக்கும் வழக்குகளை மனதில் வைத்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஜே.எஸ். முறையை அமல்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருந்தது. மேலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துவிட்டால் இதனை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கு சிக்கல் இருக்காது.



ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ். தேர்வு போல ஐஜேஎஸ் தேர்வும் எப்படி வரவேற்பைப் பெறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment