Saturday, December 31, 2011

மக்கள் கொடுத்த லஞ்சம் ரூ.471 கோடி…!


மக்கள் கொடுத்த லஞ்சம் ரூ.471 கோடி…!இந்திய ஊழல் ஆய்வு 2010 என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம் என்கிற தன்னார்வ அமைப்பு 12 மாநிலங்களில் ஆய்வு நடத்தியது. வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் நடத்திய இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்ட தகவல்:நாட்டில் ரேஷன்கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளைப் பெற, கிராமப்புற மக்கள் கடந்தாண்டில் மட்டும் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளனர்.


சராசரியாக ஒரு குடும்பத்தில் இருந்து வழங்கப்பட்ட லஞ்சம் 164 ரூபாய். அசாம், குஜராத், கேரளா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு 2010-2011ம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது, இந்த 471 கோடியே 80 லட்சம் ரூபாய் அதற்கு சமமானது என்று கூறலாம்.மாத வருமானம் 5,000 ரூபாய் அல்லது அதற்கு கீழ் பெறுபவர்களில் நான்கில் மூவர் இது போன்ற அடிப்படை வசதிகளைப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. இவர்கள் பெரும்பாலும், அரசின் சலுகைகள் பெற்று வாழும் ஏழைகள்.
அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவதற்கு முறையான அட்டை பெற ஒரு ரூபாய், இரண்டு ரூபாயும், எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் பரிசோதிக்க தனியாக அதிக அளவு லஞ்சம் கொடுத்துள்ளனர்.ரேஷன் கார்டு விண்ணப்பம் பெற ஐந்து ரூபாயும் எந்த ஆவணங்களும் இல்லாமல்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கார்டு பெற 800 ரூபாயும் லஞ்சம் கொடுத்துள்ளனர்.முறையான தண்ணீர் இணைப்பிற்கு, பல்வேறு வகையான சேவைகளுக்கு 15 முதல் 950 ரூபாய் வரை லஞ்சமாக கிராம மக்கள் வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களுக்கும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட இதுபோன்று லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி வழங்கப்பட்ட லஞ்சத்தில் பொதுப்பணித் துறைக்கு 156 கோடியே 80 லட்சம் ரூபாயும், தண்ணீர் இணைப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கு 83 கோடியே 30 லட்சம் ரூபாயும், மருத்துவமனை சேவை பெற 130 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.லஞ்சப் பட்டியலில் சத்திஸ்கர், பீகார் மாநிலங்கள் முதல் இடத்தில் உள்ளன. பொதுப்பணித்துறையில் லஞ்சம் அதிகரித்து விட்டதாக இம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.பீகாரில் ஊழல் இருப்பதாக 87 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல் அதிகரித்து இருக்கிறது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment