Saturday, July 7, 2012

மேற்கு தொடர்ச்சி மலை பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டதால் பெரியாற்றில் புதிய அணை கட்ட முடியாது

மதுரை : ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய மலையாக தேர்வு செய்து அறிவித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் 1,600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கி.மீ. பரப்பில் பரந்துள்ளது. அரிய 325 உயரினங்கள், தேசிய வனப்பூங்கா, புலி, யானைகள் உள்ளிட்ட சரணாலயங்கள், பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகள் இதில் அமைந்துள்ளன.

உலக பாரம்பரிய மலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் கூடுதல் பராமரிப்பு, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு, மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. இந்த குழு தேசிய வனப்பூங்கா, புலி, யானைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதி நிறைந்த 60 சதவீத பகுதிகளில் புதிய அணை கட்டக்கூடாது,

மின் நிலையங்கள், ரயில் பாதை, கனிம சுரங்கம் உள்ளிட்ட எந்த திட்டங்களும் அனுமதிக்கக் கூடாது, சுற்றுச் சூழல் பாதிக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கேரளா, கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையும் மீறி தான் நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த அரிய புள்ளி விவரங்களை யுனெஸ்கோ அமைப்புக்கு வழங்கியது. அதன்படி, யுனெஸ்கோ இந்த மலையை பாரம்பரிய இடமாக தேர்வு செய்துள்ளது. எனவே மத்திய அரசு ஏற்றுள்ள நிபுணர் குழு அறிக்கையை நிறைவேற்றும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்டும் முயற்சியில் கேரளா தீவிரம் காட்டி வருகிறது. புதிய அணை கட்ட திட்டமிடும் பகுதி உலக பாரம்பரிய மலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரளா புதிய அணை கட்டும் முயற் சிக்கு வலுவான தடை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசும், யுனெஸ்கோவும் அனுமதி அளிக்காது.

தென் மண்டல மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குழுத் தலைவர் கே.எம். அப்பாஸ் கூறும்போது, “மேற்கு தொடர்ச்சி மலை உலக பாரம்பரிய பட்டியலுக்கு உயர்ந்துள்ளதால், இங்கு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவின் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்Ó என்று நம்பிக்கை தெரிவித்தார்

No comments:

Post a Comment