Thursday, July 19, 2012

ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி தலையிடும் அரசு - பெரம்பலூரில் நடந்தது என்ன ?

 
ஷரிஅத் சட்டத்தில் (முஸ்லிம் தனியார் சட்டம்) அத்துமீறி தலையிடும் தமிழக அரசு அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM அப்துர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூட்டாக தெரிவித்ததாவது; ‘பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சார்ந்த ராஜா முகம்மதுவின் மகன் சாகுல்ஹமீது என்பவருக்கும், அரும்பாவூரை சார்ந்த அப்துல் கபூரின் மகள் யுரேஷா பேகத்திற்கும் கடந்த 25.06.2012 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு
  
திருமணம் நடைபெறும் நேரத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அஹ்மத் உத்தரவின் பேரில் வருவாய் கோட்ட அதிகாரி (ஆர்.டி.ஓ) ரேவதி, சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மா ஆகியோர் காவல் துறையினருடன் அங்கு சென்று இது மைனர் பெண்ணின் திருமணம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது பெண்ணின் பெற்றோரும், ஜமாத்தினரும் இவ்வாறு திருமணம் செய்ய ஷரிஅத் சட்டத்தில் எங்களுக்கு அனுமதி உண்டு என்று கூறிய பின்னரும் விசாரணை என்ற பெயரில் மணப் பெண்ணையும், மணமகனையும் அவர்களுடைய பெற்றோர்களையும் அங்கிருந்து அழைத்து சென்று காலை முதல் இரவு வரை காக்க வைத்து இறுதியில் மணமகனை சிறைக்கும் மணமகளை அரசின் பெண்கள் காப்பகத்திற்கும் அனுப்பி உள்ளனர்.

இது முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும் பழிவாங்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டதோடு தகாத வார்த்தைகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் இது இந்திய அரசியல் சட்டம் வழங்கிய மத சுதந்திர உரிமைக்கு எதிரானது ஆகும்.
நமது இந்திய தேசம் பல்வேறு மதத்தினர் வசிக்கும் நாடு. இங்கு வாழும் ஒவ்வொரு மதத்தினரும் தங்களுடைய மத அனுஷ்டானங்களை கடைபிடித்து வாழ்வதற்கு வழிவகை செய்யும் விதமாகத்தான், நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து இருக்கின்றது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மத சுதந்திர உரிமையை (Right to Freedom of Religion – Article 25) வழங்கியுள்ளனர்.




அதன் அடிப்படையில் வணக்க வழிபாடுகள், திருமணம், சொத்துரிமை உள்ளிட்ட சிவில் விவாகரங்களில் முஸ்லிம்கள் தங்களுடைய தனியார் சட்டமான ஷரிஅத் சட்டத்தை பின்பற்றி நடைமுறைபடுத்த அரசும், சட்டமும் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன. மேலும் இது போன்ற திருமண விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட உரிமையை நிலை நிறுத்தும் விதமாகவும், முஸ்லிம்களின் மத உரிமையை உறுதிப்படுத்தும் விதமாகவும் கடந்த ஜூன்-5 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஷரிஅத் சட்டத்தின்படி (Mohamedan Law) ஒரு முஸ்லிம் மைனர் பெண் பருவமடைந்து விட்டால், அதவாது 15 வயதை அடைந்து விட்டால் அவள் திருமணம் செய்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட இந்த முஸ்லிம் பெண்ணின் திருமணம் செல்லாது என்று சொல்ல முடியாது என முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரிவுகளையும், பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் கோடிட்டுக் காட்டி மாண்புமிகு நீதிபதிகள் S.P.கார்க் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்களின் ஷரிஅத் சட்ட உரிமையை கலங்கப்படுத்தும் விதமாகவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கிய மத உரிமையை பறிக்கும் விதமாகவும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். இதே போன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் ஒரு திருமணத்தை தடுத்துள்ளனர்.

சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய இந்த அதிகாரிகள் சட்ட வரையறையை மீறியும், தான்தோன்றித் தன்மையும், உள்நோக்கத்துடனும் திருமண பந்தத்தை சீர்குலைக்கும் விதமாகவும் அத்து மீறி நடந்துள்ளனர்.

சமூக நலத்துறை என்ற பெயரில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் இந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற சிறுபான்மை விரோத போக்குகள் தமிழகத்தில் தொடரா வண்ணம் இருக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் பிரத்தியேக அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.என்றனர்.

ஷரிஅத் உரிமையை பாதுகாக்கவும் அத்து மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் வருகின்ற ஜூன்-17 அன்று மாலை 3 மணிக்கு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து முஸ்லிம் சமுதாய தலைவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்கள்.

No comments:

Post a Comment