Wednesday, April 4, 2012

வழக்குக் கூண்டில் - வறுமைக்கோடு

அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும் "வறுமைக்கோடு"என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம். கடந்த வாரம் ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும் (வழக்கமான சந்தைக்கடை கூச்சலுடன்)இந்த வார்த்தை எதிரொலித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழே என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே என்றும் வார்த்தை சிலம்புச்சண்டைகள் நாடெங்கும் அரங்கேறின.இதைப்பற்றி சில கருத்துக்களை இந்த பதிவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.




கோடுகளைப்பற்றி நாம் பேசப்போனால் சின்ன வயதில் நாம் அடித்து விளையாடிய நொண்டிக்கோடு விளையாட்டில் இருந்து, பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட்,டென்னிஸ் ஆகிய இன்னபிற விளையாட்டுகளின் மைதானங்களின் கோடுகளிலிருந்து , நாடுகளுக்கிடையே போடப்படும் எல்லைக்கோடுகள் வரையும், பூமிப்பந்தின் மேல் இருப்பதாக புவி இயலில் படித்த பூமத்திய ரேகை, கடக ரேகை மற்றும் மகர ரேகை வரை நமக்குத் தெரியும்.அண்ணன்மாரே! தம்பிமாரே! வறுமையும் நமக்குத்தெரியும், புரியும்.

கொடிது! கொடிது! வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை! என்று ஒளவையார் பாடியதாக ஆறாம் வகுப்பிலேயே மனப்பாடப்பகுதியில் படித்து இருக்கிறோம். ஆனால் வறுமைக்கோடு தெரியாதே!

வறுமைக்கோடு என்பது என்ன? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வறுமையையும்,வறுமைக்கோட்டையும் விளக்குவதானால் முதலில் வறுமை என்பதை சுருக்கமாக இப்படி விளக்கலாம்.

உயிர்வாழத்தேவைப்படும் குறைந்தபட்ச அத்தியாவசியமான பொருள்களையோ, சேவைகளையோ அல்லது சாதனங்களையோ பெறமுடியாத நிலையில் இருப்பவர்களை வறுமையில் அல்லது ஏழ்மையில் இருப்பவர்களாக விளங்கலாம். STATE OF ONE WHO LACKS AN USUAL AND SOCIALLY ACCEPTABLE AMOUNT OF MONEY, SERVICES OR MATERIAL IN HIS POSSESSION.

இதில் குறைந்தபட்சத்தேவை என்பதை வரையறுக்கும் அளவுகோலுக்கு பொருளாதார மேதைகள் வறுமைக்கோடு POVERTY LINE என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்த அளவுகோலுக்கு அதிகமாக துய்ப்பவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ABOVE POVERTY LINE என்றும் , இந்த அளவுகோல் அளவு கூட துய்க்க/பெற முடியாதவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் BELOW POVERTY LINE என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

எந்த ஒரு பொருளாதார அளவுகோலுக்கும் ஒரு அடிப்படை (BASE) இருக்கும்.அந்த அடிப்படையை வைத்தே பொருளாதார புள்ளி விவரங்கள் அளவிடப்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படும். இந்த அடிப்படை என்பது உயிரற்ற உடலுக்கு ஊதிவிடும் சுவாசம் போன்றது. இந்த அடிப்படையைத் தேர்வு செய்வது என்பது மிக மிக முக்கியம். ஏணி வைத்து ஏற வேண்டிய உயரத்துக்கு ஏணி வைத்து ஏறவேண்டும்.

கால் பெருவிரலை ஊன்றி உன்னி ஏறவேண்டியதுக்கு பெருவிரலின் சக்தியே போதும். இமய மலை ஏறவேண்டி இருக்கும்போது ஏணியைக்கொண்டுபோனால் எதுவும் நடக்காது. கையால் எடுக்க முடிந்த காரியத்துக்கு கேட்டர்பில்லர்(CATERPILLAR) தேவை இல்லை.உங்கள் ஜேப்பில் உள்ள பணத்தை எடுக்க ஜெ சி பி(JCB) தேவையா?.

அதனால்
- அளவுகோலை உண்டாக்க அடிப்படை (BASE).

-அதன் மூலமான புள்ளி விபரங்கள் (FACTS).

-அந்த புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய திட்டம் (PLAN).

- திட்டத்தின் அடிப்படையில் செயல் (EXECUTION).

ஆகியன தேவை. இந்த அடிப்படைதான் நாம் போடும் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இது ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு வீட்டுக்கும் பொருந்தும் .

வறுமைக் கோட்டுக்கான அடிப்படை என்ன?எதைவைத்து வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களைக் கணக்கிடுவது? ஆகிய கேள்விகளுக்குரிய விடை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் இந்தியா எடுத்துக்கொண்ட அடிப்படை இமயமலை ஏறுவதற்கு ஏணி கொண்டுபோன கதையாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆக்கத்தின் ஹை லைட்.

வறுமைக்கோட்டின் அடிப்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம் அடிப்படையாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் HDI என்று அழைக்கப்படும்HUMAN DEVELOPMENT INDEX என்பதை அடிப்படையாக வைத்துள்ளது. இந்த HUMAN DEVELOPMENT INDEX என்ற அடிப்படையே உலகில் பரவலாக பெரும்பான்மை நாடுகளால் பின்பற்றப்படுகின்ற அடிப்படையாகும்.

இலங்கை போன்ற நாடுகள் தங்களது அரசியல், இன , மொழி அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றன. மக்கள் நலம் பேணாத அரசுகள் உள்ள நாடுகள் இது பற்றி கண்டு கொள்வதே இல்லை. அங்கேயெல்லாம் வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான்.

ஏழ்மையில் உழலும் மக்களை நோக்கிய அரசின் உதவும் கரங்களை நீளச்செய்யும் இந்த வறுமைக்கோடு நிர்ணயம் இந்தியாவைப் பொறுத்தவரை கேலிக்கூத்து ஆக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்திய திட்ட கமிஷனின் அறிவிப்பின் பிரகாரம் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு குடிமகனும் அவன் நகர்ப்புறத்தில் வசித்தால் ஒரு நாளைக்கு Rs. 29/= ம் கிராமப்புறத்தில் வசித்தால் Rs. 22/= ம் ஈட்ட முடிந்தால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் ; அவனை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவன் என்று கருதி அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அவனுக்கு வழங்கவேண்டியதில்லை என்று கூறாமல் கூறி இருக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு Rs. 29/= சம்பாதித்தால் இந்திய அரசின் திட்ட கமிஷனின் பார்வையில் அவன் பணக்காரன். இந்த அளவுகோல் எவ்வளவு தவறானது என்று ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான்.

திட்ட கமிஷனின் இந்த கூற்றைப் பார்க்கும்போது இது திட்ட கமிஷனா? அல்லது நாம் திட்டுவதற்கான கமிஷனா என்று கேட்கத்தோன்றுகிறது.

(இவ்வளவு நாள் இப்படி கலவாணிப் பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம்?) எந்தப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் இப்படி ஒரு நகைப்புக்குரிய அளவுகோலை வைத்து நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இன்னும் நகைப்புக்குரியது.

அதாவது கிராமப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2400 கலோரி சக்தியும் , நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2200 கலோரி சக்தியும் போதுமாம். இந்த அளவு கலோரி உள்ள உணவுகளை இந்த Rs. 22/= & Rs. 29/= ல் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன், இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை.

இந்த விவாதம் பொருந்துமா?

இந்தக் குறுந்தொடரின் முதல் பகுதியை இப்படி முடித்து இருந்தேன்

இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன், இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை.

இந்த விவாதம் பொருந்துமா? இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.// இப்போது பார்க்கலாம்.

கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 22/= சம்பாதித்து 2400 கலோரி உண்டும் , நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 29/= சம்பாதித்து 2200 கலோரி உண்டும் ஜீவித்து இருக்கலாமென்றும், அதற்குமேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கருதி அரசு வழங்கும் உதவித்திட்டங்கள் வழங்கப்படத் தேவை இல்லை என்றும் கூறுகிறது மேதாவிகளை உள்ளடக்கிய திட்ட கமிஷன்.

திட்ட கமிஷன் சில அடிப்படியான காரணிகளை தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இப்படி ஒரு தான்தோன்றித்தனமான அளவுகோலை வழங்கி இருப்பது இத்தகைய மத்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு நாட்டின் நிலையையும், நாடித்துடிப்பையும் உணர்ந்து இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்.

வறுமைக்கோட்டிற்கு வரையறை வகுக்கின்ற பொருளியல் மேதைகள் கீழ்க்கண்ட சில காரணிகளை அடிப்படியாக வைத்து அளவிட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்கள்.

1. ஒரு தனி குடும்பத்துக்கு பயிரிடத்தகுதி படைத்த விவசாய நிலம் இருக்கிறதா?

2. குடி இருக்க வீடு இருக்கிறதா?

 3. சுகாதாரமான கழிப்பறை வசதி இருக்கிறதா?

 4. தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறதா?

 5. ஒழுங்கான வருமானம் தரும் வேலைக்குச்செல்பவர்கள் உள்ளனரா?

 6. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா?

 7. குடும்பத்தின் உறுப்பினர்களில் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் உள்ளனரா?

8. பாதுகாக்கப்படவும், பராமரிப்பு தேவையும்பட்ட முதியவர்கள் உள்ளனரா?

9.குடும்பத்தில் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் உள்ளனரா?

10. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் உள்ளனரா?

 11. அளவிடும் காலகட்டத்தில் அமுலில் உள்ள அரசின் உதவிகள் என்னென்ன?

 ஆகிய காரணிகள் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும்.

இப்படி எதையுமே கருதாமல் மொட்டைத் தத்தன் குட்டையில் விழுந்தான்என்று ஒரு அளவுகோலை அறிவிக்கிறது முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனரை இந்நாள பிரதமரை- தலைவராகக்கொண்ட இந்திய திட்ட கமிஷன். ஒருவேளை இந்த கமிஷனில் பணியாற்றும் மேல்சாதியினர் தரும் அறிக்கைகளை இதன் தலைவரும், துணைத்தலைவரும் படிக்காமலேயே கையெழுத்துப்போட்டு விடுகிறார்களோ என்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் எழுப்பியுள்ள சந்தேகம் நமக்கும் வருகிறது.

ஒரு லிட்டர் பால் என்ன விலை விற்கிறது? ஒரு கட்டுக்கீரையின் விலை என்ன? ஒரு கோழிமுட்டையின் விலை இவர்களுக்குத் தெரியுமா? ஒரு உருளைக்கிழங்கின் விலை இவர்கள் அறிந்தார்களா? இவைகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாதவன் ஒரு உழைக்கத் தகுதி பெற்ற உடல் நலத்துடன் வாழ முடியுமா?

இதற்கு தகுதியற்ற நோஞ்சான்களால் உழைக்க முடியுமா? உற்பத்தி பெருகுமா? இலவச அரிசி, கோதுமை இந்தியா முழுதும் வழங்கப்படுகிறதா? இவர்களின் வாதப்படி 2200 கலோரியில் உயிர்தான் வாழமுடியும். உழைக்க முடியுமா? உயிர் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தால் போதுமா? இப்படிப்பட்டக் கேள்விகள் பெருகும். ஆனாலும் பதிலளிக்க எந்த பொறுப்பான பதவி வகிக்கும் கொம்பனுக்கும் தகுதியிருந்தும் திராணி இல்லை.

இன்று நாட்டில் நிலைமை ஏழைகள் அரை வயிற்று சாப்பாட்டுடன் அல்லல்படுகிறார்கள். திரு. அர்ஜுன் சிங் குப்தா என்ற பொருளாதார அறிஞர் ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண மக்களில் அதாவது ஒழுங்கற்ற வருமானம் வருபவர்களில் என்று வைத்துக்கொள்ளலாம்- 23% மட்டுமே ஓரளவு வாழ்க்கைத்தரத்துடன் வாழ்வதாகவும் பாக்கி 77% வறுமையில்தான் வாழ்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

நாம் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு நமது ஊரை அல்லது சுற்றுப்பகுதிகளை இந்தக்கண்ணோட்டத்துடன் பார்த்து வருவதாக வைத்துக்கொண்டால் திரு. அர்ஜுன் சிங் குப்தா குறிப்பிடுவது உண்மை என்று நாமே உணரலாம். அப்படியே கவியன்பன் அதிரை அபுல் கலாம் அவர்களின் இந்த அர்த்தமுள்ள கவிதை வரிகளையும் உண்மை என உணரலாம்.

 ‘’வலியோ ரெளியோர் மீதினிலே

வகுத்து வைத்தக் கோடாகும்

பலியாய்ப் போகு மெளியோரும்

பயமாய்ப் பார்க்கும் கேடாகும்

 வேலி தாண்டி வரவியலா

விரக்தித் தருமே இக்கோடும்

நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
நீசர் செய்த பெருங்கேடாம்’’

விலைவாசிகள் அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கின்றன என்றும்- இந்த ஆண்டு தரப்பட்ட மாதச்சம்பளம் விலைவாசி அகவிலைப்படிகளோடு ஒத்துப்போகவில்ல என்றும் காரணம் காட்டி வருடத்துக்கு இருமுறை குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆகியோரின் அகவிலைப்படியையும் சம்பளத்தையும் உயர்த்திக்கொள்ள உபயோகிக்கும் அதே அளவுகோலை ஏழை மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு பயன்படுத்த மறுக்கும் காரணம் என்ன? அந்த அடிப்படையில் பார்த்தால் வருடா வருடம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கூடத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது?

அதுமட்டுமல்லாமல் அவர்களே தந்து இருக்கிற கீழ்க்கண்ட புள்ளி விபரங்களைப்பாருங்கள்.

2004- 2005  ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர்  37.2%
2010-2011 ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர்  29.8%

மேலேகண்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் ஐந்து வருட இடைவெளியில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையின் சதவீதம் குறைந்து இருக்கிறது.

அதன் பொருள், அதிகம் பேர் அதிகம் பொருளீட்டும் நிலைமை உருவாக்கி இருக்கவேண்டும். இதற்கு மாறுபாடாகக் காட்டி இருப்பது புதுமையிலும் புதுமையானதும் புதிரானதுமான அலுவாலியா படித்த பொருளாதாரம். (இவங்க செய்யுற ஒவ்வொரு காரியமும் நெஞ்சைப் பொக்குதே!). வருமானத்தை குறைத்துக்காட்டி வருமானவரி கட்டாமல் ஏமாற்றுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை இந்த நீசர்களுக்கும் வழங்க வேண்டும்.

காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள்?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் .
 
இப்போது தொடர்ந்து பார்க்கலாம்.

திட்ட கமிஷன் என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளுக்கான உயிர்நாடியாகும். ஐந்தாண்டுத்திட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் , மக்கள் நலவாழ்வுத்திட்டங்களும் இந்தக்குழுவில் இருக்கும் மகாபனுவர்கள் தரும் செயல் அறிக்கைகளை வைத்துத்தான் மேற்கொள்ளப்படும்.

ஆனால் இவர்கள் தரும் பொருளாதார அறிக்கைகளைப்பார்த்தால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக உண்மைப் பொருளாதார, சமூக சூழ்நிலைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டு இப்படி பித்தலாட்டமான அறிக்கை தருவது காட்டில் நிலவு காய்வதற்கும் கடலில் மழை பெய்வதற்கும் ஒப்பானது. பயனாளிகளுக்குப்பயன்படாதது.

திட்டக்கமிஷனின் தில்லுமுல்லு அறிக்கைக்கு காரணங்களாக கருதப்படுபவை அல்லது கணிக்கப்படுபவை.
1.  உலக வங்கியை திருப்திப்படுத்த
2.  உலகபெருங்குழுமங்களின் இசைக்கேற்ப நடனமாட
3.  உலக நாட்டினரின்முன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்கிற மாயமான தோற்றத்தை சித்தரிக்க,
4.  உள்நாட்டில் வறுமை ஒழிப்புத்திட்டங்களை ஒழித்துக்கட்ட
5.  முக்கியமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு தரும் மானியங்களைக் குறைக்க,
6.  நிர்வாக கோளாறுகளை மறைக்க,
7.  கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையை கண்டுகொள்ளாதிருக்க

இத்தகைய காரணங்களால்தான் இப்படி ஒரு செப்பிடுவித்தைக்குள் திட்ட கமிஷன் இறங்கி இருக்கிறது என்று காரணங்களைச் சொல்லலாம்- சொல்கிறார்கள்.

அண்மைக்கால இந்திய அரசின் பொருளாதார கொள்கை ரீதியான நடவடிக்கைகள் உலக வங்கியை திருப்திப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. முக்கியமாக நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கான முதலீடுகள் குறைக்கப்பட்டு பெருந்தொழில்களுக்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது

உலக வங்கியின் தலையணை மந்திரத்துக்கு உட்பட்டே. பெருந்தொழிலகள் பெருக்குவதற்காக விவசாய நிலங்கள் உலகவங்கியின் வழிகாட்டுதல்களின்பேரில் அபகரிக்கப்படுகின்றன. இருக்கும் நிலத்தையும் இழந்த ஏழை விவசாயி வறுமைக்கோட்டின் கீழாவது படுத்து ஒய்வு எடுக்க முடியவில்லை. ஒரு பொருளாதார அறிக்கையின்படி “ Structural adjustment policies prescribed by the International Monetary Fund (IMF) and the World Bank as conditions for loans and repayment.” என்ற வரிகள் விளங்க வைக்கும் .

உணவுதானிய வேளாண்மையானது குறைக்கப்பட்டு பணப் பயிரை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிரை நோக்கி விரட்டப்பட்டார்கள்.

இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் உலகவங்கியால் கட்ன்தரப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப்பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் வறுமைதான் வளர்ந்தது.

உழைப்பவர் வாழ்வே வீதியிலே! உறங்குவதோ நடை பாதையிலே! இரக்கம் காட்டத்தான் நாதி இல்லே!

அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை. அந்நிய நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரியும் இல்லை. நாட்டின் மூலவளங்கள் பெருங்குழுமங்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. கோதாவரி நதி தீர எரிவாயு உரிமைப்போராட்டதில் சகோதரர்களின் பங்காளி சண்டைக்கு நாட்டின் பிரதமர் கட்டைப் பஞ்சாயத்துபண்ணுகிறார். கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலைத் தர மறுக்கிறது அரசு.

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிடுமென்ற அச்சம்தான் காரணம். நாட்டை வணிகப்பாத்தி கட்டி பன்னட்டுக் குழுமங்களுக்கு விற்கத்துடிக்கிறது அரசு. சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் கொள்கை அவசர அவசரமாககிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வைஎன்ற நோக்கில் அரசு துரிதகதியில் செயல்பட நினைத்தது.

பன்னாட்டுக்குழுமங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி விமான நிலையங்களை புதிதாக கட்ட ரூ. 10,000 கோடி ஒதுக்கினார்கள். காமன்வெல்த் விளையாட்டுக்காக ரூ. 60,000 கோடி ஒதுக்கினார்கள். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு ஒதுக்கிய தொகை போதவில்லை என்று ஏழ்மை ஒழிப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை திசை திருப்பினார்கள்.

Tens of millions of dollars have been diverted in India from schemes to fight poverty and used to fund Delhi's Commonwealth Games, a report says. The Housing and Land Rights Network pressure group says its report is based on official documents obtained under India's right to information act. The group says there should be an independent inquiry into how this was allowed to happen. (Source: BBC News 14th May 2010.)

இப்படி உலக வங்கி என்ற மாமியாரும், பன்னாட்டுக்குழுமங்கள் என்கிற மனைவியும் சொல்லும் சொல்கேட்டு மாமியா வீட்டோட போய்விட்ட மருமகன் போல் மத்திய அரசு செயல் படுகிறது. மாமியார் வீட்டில் போய் இறங்கி மாமியார் வீட்டு ஜனங்கள் கூடி பொட்டிபிரிக்கிறார்கள். தாய் வீடோ, விவ்சாயம்போல் புறக்கணிக்கப்படுகிறது. உலக வறுமையின் காரணங்களை ஆய்ந்த அறிக்கை கூறுகிறது.

To attract investment, poor countries enter a spiraling race to the bottom to see who can provide lower standards, reduced wages and cheaper resources. This has increased POVERTY and inequality for most people. It also forms a backbone to what we today call globalization. As a result, it maintains the historic unequal rules of trade.

அடுத்து, நிர்வாகத்தில் கோளாறுகள், முக்கியமாக உணவு பங்கீட்டில் பாகுபாடுகள், ஊழல்கள், கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமை ஆகியவற்றை குறிப்பிடலாம். நாட்டின் உணவு உற்பத்திப் புள்ளி விவரங்களை உணவுத்தேவையின் புள்ளிகளோடு ஒப்பிட்டால் உற்பத்தி தன்னிறைவு அடைந்துள்ளது.

அதாவது நமது அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு உணவு உற்பத்தி ஆகியே இருக்கிறது. ஆனாலும் பட்டினிச்சாவுகள் என்? பற்றாக்குறை ஏன்? திட்டமிடப்படாத பகிர்விலும் பாதுகாப்பிலும் ஏற்பட்ட ஒட்டைகள்தான் காரணங்கள்.

உணவு உற்பத்தி

2008- 2009  218.20 மில்லியன் டன்

2009- 2010  237.47 மில்லியன் டன் அதாவது உற்பத்தியின் அளவு உயர்ந்தே இருக்கிறது. ஆனாலும்

ஒருகோடியே அறுபத்தொன்பது லட்சம் டன் உணவுப்பொருள்கள் சரியான சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வீனாகிப்போயின.

ஒரே ஒரு சோற்றுப்பருக்கை உண்ணும் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எடுத்து சாப்பிடு, தட்டையை வழித்து சாப்பிடு , கைவிரல்களை சூப்பி சாப்பிடு என்று இஸ்லாம் சொல்கிறது.

ஆனால் வியர்வை சிந்தி உற்பத்தியான டன் கணக்கான உணவுப்பொருள்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்தது வீணாக விட்டது யார் குற்றம்?

திட்டமிட்ட பகிர்வு இல்லை- சேமித்துவைக்க வக்கில்லை. பகிர்ந்தளிக்கும் திட்டங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது . இதோ உலகவங்கியின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது.

 Corruption in developing countries definitely must be high on the priority lists (and is increasingly becoming so in the wake of the global financial crisis), but so too must it be on the priority lists of rich countries. World Bank report said attempts by the Indian government to combat poverty were not working. It said aid programmes were beset by corruption, bad administration and under-payments.

இத்தகைய காரணங்களால் தங்கள் மீது எழுப்பப்படும் கேள்விக்கணைகளை தாங்க வக்கில்லாமல் வறுமைக்கோட்டின் துப்பட்டிக்குள் நுழைந்துகொண்டு பேராசிரியர் சுரேஷ் டி. தெண்டுல்கர் தந்த வக்கற்ற அறிக்கையை வகையில்லாமல் ஏற்றுக்கொண்டு தனது கையால் ஆகாத தனத்தை வறியவர், எளியவர், வகையிலர், தொகையிலரின் வாழ்வின் மேல் தாக்கி இருக்கிறது மத்திய அரசு.

 மக்கள் இளிச்சவாயர்களாக விழிப்புணர்வற்று இருக்கும்வரை இதுபோன்ற செயல்களே நடக்கும்.

 இதோ வைரமுத்து
 
சுதந்திர இந்தியா

ஐம்பதாண்டு உயரத்தில்

அடிமை இந்தியன்

ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

 ஏ நாடாளுமன்றமே!

வறுமைக் கோட்டிற்குக் கீழ்

நாற்பது கோடிப் பேர் என்றாய்

அறிவுக் கோட்டின் கீழ்

அறுபது கோடிப் பேர்

அதை மட்டும் ஏன்

அறிவிக்க மறந்தாய்

மக்களின் அறியாமையை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அதை ஏற்றுகொள்வார்கள் என்று கருதும் அரசுகள் அழியவேண்டும். அழியுமா? அழிப்போமா? எதை எதிர்க்காவிட்டலும் இந்த அரசின் வறுமைக்கோட்டு அறிக்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

 வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய் நின்றது ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்குடித்து தளர்ச்சியைப் போக்கிகொள்ளக்கூடாதா என்று கேட்டேன். வறுமைக்கோடு என்னைத்திருப்பிக் கேட்டது இருக்கும் 22/=ரூபாயில், 14/= ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டால் பாக்கி 8/= ரூபாயை வைத்து நான் நாக்கு வழிக்கவா? என்று

 எனக்குத்தெரியவில்லை. யாரைக்கேட்கலாம்.? எக்ஸ் க்யூஸ் மி இந்த அட்ரஸ் எங்கே இருக்குதென்று சொல்ல முடியுமா? மன்மோகன் சிங் ரேஸ் கோர்ஸ் ரோடு புது டில்லி.
இபுராஹீம் அன்சாரி

No comments:

Post a Comment