Friday, April 13, 2012

சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது.

இந்தோனேசியாவின் ஆச்சே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத் தட்டுக்களை செங்குத்தாக -அதாவது மேலிருந்து கீழாக அசைக்கவில்லை. மாறாக, பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது.
 
 
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.

நேற்று இந்தோனேசியக் கடலில் ஏற்பட்ட பூகம்பமும் சாமானியமானதல்ல. அதுவும் அடுத்தடுத்து இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.முதலில் 8.7 ரிக்டர் அளவிலும் பின்னர் 8.3 ரிக்டர் என்ற அளவிலும் பெரும் பூகம்பங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ஒரு சுனாமி அலை கூட எழவில்லை. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் கூட சுனாமி வராதது குறித்து விஞ்ஞானிகள் விளக்குகையில், பூகம்பமானது செங்குத்தாக, அதாவது மேலிருந்து கீழாக பாறைத் தட்டுக்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் கடல் நீர் வெளித் தள்ளப்பட்டு சுனாமி பேரலைகள் ஏற்படும்.ஆனால் பக்கவாட்டில் தட்டுக்கள் நகர்ந்தால் அதனால் சுனாமி அலைகள் ஏற்படாது.நேற்றும் கூட பக்கவாட்டில்தான் தட்டுக்கள் நகர்ந்துள்ளன. இதனால்தான் சுனாமி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் கண்டத் தட்டுகள் கிடைக்கோட்டு மட்டத்தில் அதாவது செங்குத்து நகர்தல் இல்லாமல், நகர்ந்ததால் கடல் நீர் எழும்புதல் குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளனர்.

செங்குத்து நகர்தல்
 
 
நேற்று ஏற்பட்டது ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட்’ (Strike Slip Fault) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2004-இலும், ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பமும் சப்டக்ஷன் மண்டலம் (Subduction Zone) அல்லது இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகளில் ஒன்று மற்றதன் அடியில் போய் செருகிக் கொள்ளும் செங்குத்து நகர்தலாகும், இதில் வெளியாகும் நிலநடுக்க அலை சக்தி பயங்கரமானது ஆனால் கண்டத் தட்டுக்கள் கிடைக்கோட்டு மட்டத்தில் நகர்ந்ததால் சக்தி அவ்வளவாக வெளிப்படவில்லை.

இரண்டுமே கடலுக்கு அடியில் 14 மற்றும் 10 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பத்திலிருந்து வெளியாகும் சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்க பூகம்பத்தில் 6 மடங்கு அதிக சக்தி வெளியானது. நேற்று ஏற்பட்ட 2வது பூகம்பத்தில் வெளியான சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 22 மடங்கு அதிக சக்தி வெளியானது.

இந்தோனேசிய தேசிய பூகம்ப தகவல் புவியியல் விஞ்ஞானி ஆமி வான் இதைப்பற்றி கூறுகையில், 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட அந்த கடும் பூகம்பத்தின் போது இந்தியக் கண்டத் தட்டு இதைவிட சிறிய பர்மா கண்டத்தட்டுக்களுக்கு அடியில் போய் செருகியது. அப்போது சுமார் 50 அடி உயரத்திற்கு கண்டத்தட்டு நகர்ந்துள்ளது. இதனால் கடல் தரை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட சுனாமி பேரலைகள் ஏற்பட்டது.

ஆனால் நேற்று ஏற்பட்ட பூகம்பம் ஒரே பிளேட்டில் அதாவது ஆஸ்ட்ரேலியக் கண்டத்தட்டின் உள்ளேயே ஏற்பட்ட மாற்றம் இதனால் இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகள் இதில் மோதலில் ஈடுபடவில்லை. மாறாக ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் காரணமாக ஒன்று மற்றதிலிருந்து சற்றே கிடைக்கோட்டு மட்டத்தில் விலகியுள்ளது. இதனால் சீ ஃப்ளொர் என்று அழைக்கப்படும் கடலடித் தரையின் அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் சுனாமி ஏற்படவில்லை.

மேலும் ஆஸ்ட்ரேலிய கண்டத்தட்டு சாதாரணமாக் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ அதே திசையில்தான் இந்த ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் பாறை நகர்ந்துள்ளது.

நேற்று ஏற்பட்ட பூகம்பம் 2004பூகம்பம் ஏற்பட்ட சப்டக்ஷன் மண்டலம்என்று அழைக்கப்படும் இரண்டு கண்டத் தட்டுக்களில் ஒன்று மற்றதன் அடியில் சென்று நுழையும் பகுதிக்கு 100கிமீ மட்டுமே மேற்கேயிருந்துள்ளது என்கிறார் ஹைதராபாதில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி ஆர்.கே. சத்தா கூற்கிறார்.

மேலும் 2004 சுனாமியை தீர்மானித்த சப்டக்ஷன் மண்டலத்திற்கு அருகே நேற்றைய பூகம்ப மையம் இருந்ததால் ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட், சப்டக்ஷன் மண்டலம் சந்திக்கும் மும்முனை சந்திப்பின் அருகே நேற்றைய பூகம்ப மையம் இருந்தது என்கிறார் சத்தா.

1950 – 1965ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.5 ரிக்டர் அளவு கோல் பூகம்பங்கள் ஏற்பட்டது போல் தற்போது 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான புவிப்பாறை சூழல் அப்பகுதியில் நிலவுவதாக சத்தா தெரிவித்துள்ளார்.அதாவது 1950- 65 ஆம் ஆண்டுகளிடையே ஏற்பட்டது போல் தற்போதும் மிகப்பெரிய நிலநடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக ரிக்டர் அளவு பூகம்பம் வரும் நாட்களில் ஏற்படாது என்று கூறுவதற்கில்லை என்கிறார் சத்தா.

ஒருவேளை செங்குத்தாக பாறைகள் நகர்ந்திருந்தால் மிகப் பெரிய சேதத்தை ஆசிய நாடுகள் சந்தித்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment