Thursday, April 5, 2012

பாவம் அப்பாவி ஜனம்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத்தான் போலீஸ். ஆனால், அந்த பணியில் இருக்கும் போலீசார் சில நேரங்களில் சட்டம் ஒழுங்கையே கெடுத்து விடுகிறார்கள். காக்கி சட்டை போட்டுவிட்டால்

என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் நம்மை கேட்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆசிரியர் பணிக்கான விண்ணப்பத்தை பிளாக்கில் விற்பதை தட்டிக்கேட்டு இருக்கிறார்கள் ஆசிரியர்கள். இது நியாயமா? என கேட்ட ஆசிரியரை கன்னத்தில் மாறி, மாறி அறைந்திருக்கிறார் தர்மபுரி டிஎஸ்பி. கணவருக்கு ஆதரவாக வந்த மனைவியை நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆசிரியர்கள், பட்டதாரிகள் குவிந்தனர். விண்ணப்பங்களை அதிக விலைக்கு பிளாக்கில் விற்பதாக கூறி ஆசிரியர்கள் மறியல் செய்தனர். கலைந்து செல்லும்படி கூறிய போலீசாருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு ஆசிரியை எதிர்ப்பு தெரிவித்தார். அவரை போலீசார் திட்டியுள்ளனர். அங்கு வந்த அவரின் கணவர், ‘‘ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்? விண்ணப்பம் கிடைக்காவிட்டால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால்தான் வலியுறுத்தி கேட்கிறோம்’’ என வாதிட்டார்.

ஆத்திரம் அடைந்த டிஎஸ்பி சந்தானபாண்டியன் அந்த ஆசிரியர் கன்னத்தில் அறைந்தார். ‘‘யார் உங்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது.. எப்படி அடிக்கலாம்’’ என்று கேட்ட அவரை மீண்டும், மீண்டும் அறைந்திருக்கிறார். கன்னத்தில் அடி வாங்கிய கணவரை காப்பாற்ற ஓடிவந்த மனைவி (அவரும் ஆசிரியைதான்) மீதும் டிஎஸ்பி கோபம் பாய்ந்தது. அவரை நெஞ்சில் கையை வைத்து தள்ளினார். அந்த ஆசிரியை தடுமாறி நடுரோட்டில் அலங்கோலமாக விழுந்தார். இதை பார்த்த மற்ற ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிஎட் முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்திருப்போர் எண்ணிக்கை மட்டுமே 3 லட்சத்துக்கு அதிகம். ஆனால் அந்த அளவுக்கு விண்ணப்பங்கள் இல்லாததால்தான் அதை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு நடக்கிறது. அதிகாரம் கொடுத்து பார்த்தால்தான் ஒருவனின் உண்மையான சுயரூபம் தெரியும் என்பார்கள். கல்வி கண் திறக்கும் ஆசிரியர்களை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார் அந்த டிஎஸ்பி.

பொதுமக்கள் முன்னிலையில் பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் பார்க்க இதுபோல் அநாகரிகமாக நடப்பவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் தனியே சிக்கியவர்களிடம், லாக்கப்பில் எப்படியெல்லாம் கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.  பாவம் அப்பாவி ஜனங்கள்.

தமிழ் முரசு  

No comments:

Post a Comment