Monday, March 26, 2012

மாணவர்களே.. தேர்வு பயம் தேவையற்றது

பொதுவாக தேர்வு என்றாலே மாணவர்களுக்கு சற்று பயம்தான். அதிலும் பொதுத் தேர்வு என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். பயத்துடன் காய்ச்சலும் கூட சேர்ந்து கொள்ளும். அதிலும் சிபிஎஸ்இ போன்ற சற்று அதிகப்பாடச்சுமை உள்ள மாணவர்களுக்கு தேர்வு காரணமாக உடல்நிலை மிகவும் கெட்டு விடுகிறது.
மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தேர்வு நேரத்தின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் இலவச தொலைபேசி அழைப்பில் மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங்கும் அளிக்கிறது.

மார்ச் மாதம், மாநில கல்வித் துறை மற்றும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வுக்கு இன்னும் 15 நாட்களே இருப்பதால் பள்ளி, மாணவ, மாணவிகளும் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரியான உணவை எடுத்துக் கொள்ளாமல், தூக்கம் இன்றி என்னேரமும் படித்துக் கொண்டே இருப்பதால் அவர்களது உடல்நிலையும், மனநிலையும் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில், 70% மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது. நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக போதிய உணவை எடுத்துக் கொள்ளாததும், உணவுக்கு முன் கை கழுவ மறப்பதும், படிப்பதற்கான விடுமுறை நாளில் சில மாணவர்கள் குளிக்காமல் இருப்பதும் கூட இந்த ஜுரத்திற்கு காரணமாக அமையலாம் என்கிறது அந்த ஆய்வு அறிக்கை.
மாணவர்களே... தேர்வு என்பது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை தைரியத்துடனும், சந்தோஷத்துடனும் எதிர்கொள்ளுங்கள். அதை விடுத்து பயமும், மன அழுத்தமும் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைத் தரப்போவதில்லை. மூன்று வேளை நன்றாக உண்ணுங்கள். எதையோ சாப்பிடுகிறோம் என்றில்லாமல் சத்துணவாக சாப்பிடுங்கள். போதிய உறக்கத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்.
பயத்தை போக்க உங்கள் நண்பர்களுடன் அளவளாவுங்கள். நாள் முழுக்க படித்துக் கொண்டே இருக்காமல் அவ்வப்போது காலாற நடப்பது, வீட்டில் ஏதேனும் சிறு சிறு வேலைகள் செய்வது என்று மனதை மாற்றுங்கள். உங்களை நீங்களே அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். மிக இனிமையான தருணங்களை நினைத்து மனதை லேசாக்குங்கள். அப்புறம் என்ன மீண்டும் படிக்கச் செல்லுங்கள்.
உங்களை வறுத்திக் கொண்டு தேர்வெழுதினால்தான் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். உங்கள் நண்பர்கள் 3 மணிக்கு எழுதிந்திரிக்கிறார்கள் என்பதற்காக நீங்களும் எழுந்து உட்கார்ந்து கொண்டு தூங்கி தூங்கி வழிந்து கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு என்று படிக்க நேர அட்டவணை வகுத்துக் கொண்டு அதன்படி படியுங்கள். நிச்சயம் சாதிப்பீர்கள்

No comments:

Post a Comment