Friday, February 10, 2012

குவிகிற குப்பை ஆபத்து!

தமிழ்நாடு  முழுக்க  ஒவ்வொரு  நாளும்  குவிகிற குப்பைகளின்  அளவு 14,000 மெட்ரிக்  டன்! இது  ஜஸ்ட்  ஒருநாள்  கணக்குதான்.  குப்பையின்  அளவு இன்று 14  ஆயிரமாக  இருந்தாலும்  அடுத்தடுத்த  ஆண்டுகளில்  அது 25 ஆயிரமாக,  100 ஆயிரமாக  உயரும்..! அதை  சமாளிக்க  நாம் தயாராக  இருக்கிறோமா?


ஒரு  தன்னார்வத்  தொண்டு  நிறுவனம் 2016ம்  ஆண்டில்  நாம்  கொட்டுகிற  குப்பைகளை  நிரப்ப,  1,400 சதுர கிலோ  மீட்டர்  பரப்பளவுள்ள  நிலம் தேவை என  கணக்கிட்டுள்ளது.  எளிதாக  விளக்குவது  என்றால்,  கோவை  மாவட்டத்தில்  பாதியைக்  கொடுக்க  வேண்டியிருக்கும்.  தமிழகத்தில்  மட்டும்  அடுத்த  ஐந்தாண்டுகளில்  எலெக்ட்ரானிக்  குப்பைகள்  மட்டுமே 8,000  டன்  குவியப்போகின்றன!

அதிலும்  குறிப்பாக  சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி  மாதிரியான  நகரங்கள்  குப்பை கொட்டுவதில்  போட்டி  போடுகின்றன.  சென்னையில் 1991ம்  ஆண்டு  கணக்குப்படி  குவிந்த  குப்பைகளின்  அளவு வெறும் 600  டன். ஆனால்,  இன்றோ  ஒவ்வொரு  நாளும் 4,000  டன்  குப்பைகள்  சென்னையின்  பல்வேறு  பகுதிகளில்  கொட்டித்  தீர்க்கப்படுகின்றன.  அதிகரிக்கும்  பிளாஸ்டிக்  பயன்பாட்டால்  கிராமங்களும்  குப்பைகளுக்கு  பலியாகும்  நிலை  உண்டாகியிருக்கிறது.  நிலங்கள்  பாழாகின்றன...  நீர்நிலைகள்  அழிகின்றன...  இதனால்,  மக்களின்  உடல்  நலத்திற்கும்  உயிருக்கும்  ஆபத்து  உருவாகி  இருக்கிறது.

குப்பைகள்  திடீரென  அதிகரிக்க  காரணம் என்ன?  அதன்  விளைவுகள்  என்ன? எப்படி  சரி செய்வது?  கண்டறிய  களமிறங்கியது,  ‘புதிய  தலைமுறை’.

குப்பைகளில்  இரண்டு  வகையுண்டு.  மக்கும் குப்பை,  மக்காத  குப்பை.  தமிழக  அளவில்  குவியும்  குப்பைகளில்  மக்கும்  குப்பைகளின்  அளவு 60 சதவிகிதம்.  மக்காத  குப்பைகளின்  அளவு 35 சதவிகிதம்.  மற்றவை 5  சதவிகிதம்தான்.  இதில்  மக்கும்  குப்பைகள் என்பது  உணவுக்  கழிவுகள்  தொடங்கி  பேப்பர்,  மக்கும்  பிளாஸ்டிக்  குப்பைகள்,  மாமிசம்  என நமக்கு  மிக  நெருக்கமான  பொருட்களின்  குப்பை  வடிவங்கள்தான்.  மக்காத  குப்பைகள்  என்பது  பிளாஸ்டிக்,  ரப்பர்,  கண்ணாடி,  உலோகங்கள்  மற்றும்  வேதிப்பொருட்கள்.

‘அதுதான்  குப்பைகள்  மக்கிடுமே!  அப்புறம்  நமக்கு என்ன  பாதிப்பு  வந்துடப்போகுது?’  என  நினைக்கலாம்.  மக்கும்  குப்பைகளை  கொட்டிக்  கொட்டி  குவித்து  வைப்பதால்  நாள்பட நாள்பட  அது  மீத்தேன்  வாயுவை  உண்டாக்கும்.  இது எரியக்  கூடியது.  குப்பை  மேடுகளில்  எப்போதும் புகை  வந்துகொண்டிருப்பதை  நாம்  தினமும் பார்க்க  முடியும்.  காரணம்,  இந்த  மீத்தேன்தான்.


குப்பை  மேடுகளுக்குள்  எப்போதும்  இந்த மீத்தேன்  வாயு  எரிந்துகொண்டேயிருக்கும்.  காற்றில்  உள்ள  கார்பன் டை  ஆக்ஸைடு இதை  முழுமையாக  எரிய  விடாமல்  தடுக்கும்.  இதனால்தான்  இது எப்போதும்  புகைந்து  கொண்டேயிருக்க  காரணம். இது,  குப்பைகளில்  கலந்துள்ள  பிளாஸ்டிக்,  ரப்பர்  முதலான  மக்காத  குப்பைகளோடு  சேர்ந்து  எரிவதால் பல  பாதிப்புகளை  உண்டாக்கும்.

மீத்தேன்  வாயுவை  தொடர்ந்து  சுவாசிக்கும்  மக்களுக்கு  சுவாசக்  கோளாறுகள்  தொடங்கி,  புற்றுநோய்கூட  உண்டாவதாக  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.  இந்தக்  குப்பைகளால்  உண்டாகும் டயாக்சின்  என்னும்  வாயு, காற்றின்  மூலக்கூறுகளில்  அமர்ந்து  கொண்டு பல  ஆயிரம் கிலோ  மீட்டர்கள்  கூட  பயணிக்கும்  திறன்  கொண்டவை.  இவைதான்  புற்றுநோய்  உண்டாகவும்  முக்கியக்  காரணமாகவும்  உள்ளது. ‘சார்!  அவருக்கு  எந்த கெட்ட  பழக்கமும்  கிடையாது.  ஆனால், பாவம்  கேன்சர்  வந்து செத்துட்டாரு’  என நிறைய  பேர்  பேசுவதைக்  கேட்டிருப்போம்.  காரணம்,  இந்தக்  குப்பைகளினால்  உண்டாகும்  டயாக்ஸின்  மாதிரியான  கொடிய  நச்சுப்புகைதான்.  மக்காத  குப்பைகளால்  நிலமும்  நீர் வளமும்  ஒட்டுமொத்தமாகப்  பாதிக்கப்படும்  சூழலும்  உருவாகியுள்ளது.  கோவையில்  ஒரு  காலத்தில் 32  குளங்கள்  இருந்ததாக  சொல்லப்பட்டாலும்  இன்று விரல்  விட்டு  எண்ணக்  கூடிய  அளவில்தான்  குளங்கள்  மிச்சமிருக்கின்றன.  இவற்றில்  பலவும்  குப்பைகள்  கொட்ட, மெகாசைஸ்  குப்பைத்  தொட்டிகளாக  மாற்றப்பட்டுள்ளன.  குப்பைகள்  கலந்த  நீர்நிலைகளில்  எந்த  ஜீவனும் வாழ  முடியாது.  அதோடு, நிலத்தடி  நீரையும்  பாழாக்கும்  சக்தி  இந்தக்  குப்பைகளுக்கு  உண்டு.

குப்பைகள்  ஏன் பெருகின?


நம்  வாழ்க்கைமுறை  மாற மாற,  குப்பைகளின்  அளவும்  கணிசமாக  அதிகரித்தே  வந்துள்ளது.  முன்னெல்லாம்  நகரங்களில்  கூட வீடுகளுக்கு  பின்னால்  எருக்குழி  என்று ஒன்று  இருக்கும்.  உணவுக்கழிவுகளையும்  வீணான  காய்கறி,  பழங்களையும்  அதில்  போட்டு  அதன்மீது  கொஞ்சம்  மண்ணைத்  தூவிவிட்டால்  போதும். சில  மாதங்களில்  தோட்டத்திற்கு  உபயோகிக்க  நல்ல உரம் தயார்.  ஆனால், இன்று  வீடுகளே  குழியளவு  சுருங்கிப்  போயிருக்கிறது.  இதில்  எருக்குழிக்கு  எங்கே போவது?

அதோடு  வீட்டில்  உபயோகித்த  பால் கவர்,  பவுடர்  டப்பா, மை  டப்பா, பாட்டில்கள்,  உபயோகித்த  டூத் பிரஷ்  என வீணாகும்  பிளாஸ்டிக்  மற்றும்  உலோகப்  பொருட்களை  காலாங்கடைக்கு  எடைக்கு  போடுகிற  வழக்கம்  இருந்தன.  ஆனால், இன்றோ  எல்லாமே  யூஸ் அன்  த்ரோதான்.  இயல்பிலேயே  திடக்கழிவு  மேலாண்மையைக்  கையாண்ட  நம்மால்  இன்று அதைப்  பின்பற்ற  முடிவதில்லை.

இன்று நம்  வீட்டில்  ஒரே ஒரு  குப்பைத்தொட்டி,  அதிலேயே  உணவுக்  கழிவுகளும்  பவுடர்  டப்பாவும்  மருந்து  பாட்டிலும்  மொத்தமாகக்  குவிகின்றன.  அதில், பிளாஸ்டிக்  கவர்களின்  பங்கும்  கணிசமானது. புரோட்டா  வாங்கப்  போனாலும்  குருமாவைக்கூட  பிளாஸ்டிக்  கவரில்தான்  வாங்க  வேண்டியிருக்கிறது.  பிளாஸ்டிக்  கப்பில் டீ  குடிப்பது  உயர்வாக  கருதப்படுகிறது.  இந்த மனநிலை  பெருகப்  பெருக, குப்பைகளின்  அளவும்  பெருகியுள்ளன.  வாங்கும்  சக்தி  அதிகரிக்க,  கண்டதையும்  வாங்கி  வீட்டில்  குவிக்கிறோம்.  முன்னெல்லாம்  ஒரு  தொலைக்காட்சியின்  ஆயுள் பத்து  முதல்  பதினைந்து  ஆண்டுகள்.  இன்றோ  எல்.சி.டி.,  3டி., எச்.டி.  என மாறிக்  கொண்டேயிருக்கும்  தொழில்நுட்ப  வேகத்தில்  இரண்டு  ஆண்டுகளிலேயே  எதுவும்  பழசாகிப்போகின்றன.  நுகர்வு  கலச்சாரமும்  உலக  மயமாக்கலும்  எதையும்  யூஸ் அன்ட்  த்ரோ என நம்மை  பழக்கியிருக்கிறது.

இதுபோக  சரியான  மேலாண்மை  இல்லாமல்  தொழிற்சாலைக்  கழிவுகளும்  மருத்துவக்  கழிவுகளும் மலைபோல  குவிகின்றன?  இதைத்  தடுக்க  சினிமாவில்  வருவதைப்போல  அந்நியனோ,  ரமணாவோ,  சூப்பர்மேனோ  வரப்போவதில்லை...  பிறகு  என்னதான்  செய்வது  இந்தக்  குப்பைகளை?

அரசு  என்ன செய்கிறது?


தமிழ்நாட்டில்  ஒவ்வொரு  ஊரிலும்  குப்பைகளை  மொத்தமாக  சேகரித்து,  அதை  அப்படியே  கலந்துகட்டி,  ஊருக்கு  ஒதுக்குப்புறமாக  இருக்கிற  காலி இடங்களில்  கொட்டி  நிரப்பப்  படுகின்றன.  குப்பைகள்  அதிகரிக்க  அதிகரிக்க  புதிதாக  இடம் பார்த்து,  அந்த  இடத்தில்  கொட்டுவதும்  தொடர்கின்றன.  அதாவது,  சென்னையில்  கொடுங்கையூரில்  இடமில்லையா?  பெருங்குடியில்  கொட்டு...  அங்கு  இடமில்லையா?  பள்ளிக்கரணையில்  கொட்டு...  அங்கு  இடமில்லையா?  புதிய  இடம்  கண்டுபிடி!  இதுபோல  சென்னையில்  எட்டு  இடங்களில்  குப்பைகள்  டன்  கணக்கில் மலைபோல  குவிக்கப்பட்டுள்ளன.  கொட்டப்படுகிற  எல்லாக்  குப்பையும்  அள்ளப்படுவதும்  இல்லை.

தமிழ்நாடு  முழுக்க  மக்களால்  கொட்டப்படும்  குப்பைகளில்  80 சதவிகிதத்தை  அரசினால்  அள்ளமுடிகிறது.  மீதியெல்லாம்  சாலைகளிலும்  தெருவோரங்களிலும்  எங்கேயும்  எப்போதும்  கிடந்து  மக்கி, நோய்  பரப்பி  வாழும். அரசு  இந்தக்  குப்பைகளுக்காக  ஒரு  டன்னுக்கு 500  ரூபாயிலிருந்து  1,100 ரூபாய்வரை  செலவளிக்கிறது.  அட  பரவாயில்லையே!  அப்படீனா,  நல்லாதானே  பண்ணுவாங்க  என்று  நினைக்கலாம்.  உண்மையில்,  இந்தத்  தொகையில் 60-70  சதவிகிதக்  குப்பைகளை  உரிய  இடங்களிலிருந்து  அள்ளுவதற்கும்,  20-30 சதவிகிதம்  அதை  எடுத்துச்  செல்லும்  போக்குவரத்துகளுக்கும்,  வெறும் 5  சதவிகிதம்தான்  அதைக்  கையாளுவதற்கும்  பயன்படுத்தப்படுகின்றன.  சுருக்கமாகச்  சொன்னால்,  உங்கள்  வீட்டு  வாசலில்  இருக்கிற  குப்பையை எடுத்துக்  கொண்டுபோய்  பக்கத்து  வீதியில் இருக்கிறவருடைய  வீட்டு  வாசலில்  கொட்டுவதைப்  போலவே.

  "நமக்கு,  நம்ம வீடு  சுத்தமா  இருந்தா  போதும்...  என்கிற மன  நிலையில்தான்  அரசும்  செயல்படுகிறது.  அதாவது,  பெரும்பாலும்  இக்குப்பைகள்  நகரத்திற்கு  நடுவே  உருவாகி,  ஏழை  மக்கள்  அதிகம்  வசிக்கிற  சேரிப்பகுதிகளுக்கு  அருகாமையில்தான்  கொட்டப்படுகின்றன.  இது, சென்னையில்  மட்டுமல்ல...  தமிழகம்  முழுக்கவே  இப்படித்தான்.  அதாவது பணக்கார,  நடுத்தரவர்க்க  மக்களிடமிருந்து  பெறப்படும்  குப்பைகளால்  முதலில்  பாதிக்கப்படுவது  அடித்தட்டு  மக்கள்தான்"  என்கிறார்,  சமூக  ஆர்வலர்  நித்யானந்த்  ஜெயராம்.

குப்பைகள்  கொட்டப்படுகிற  LAND  FILLS எனப்படும்  இடங்கள்  சட்டப்படி  என்னென்ன  வசதிகள்  பாதுகாப்புடன்  இருக்க  வேண்டுமோ  என்னென்ன  அளவீடுகளுடன்  இருக்க வேண்டுமோ  அப்படி  இருப்பதில்லை.  அவை, மிக  மோசமான  நிலையில்  இருப்பதை  யாருமே நேராகவே  சென்றாலும்கூட  பார்க்க  முடியும்.  குப்பை  லாரிகள்தான்  நோய்  பரப்பும்  வேலைகளில் முதலிடத்தில்  இருக்கின்றன.  மருத்துவமனைகள்  மற்றும்  தொழிற்சாலைக்  கழிவுகள்  மாநகராட்சி  குப்பை  வண்டிகளில்  இடம்பெறக்  கூடாது என  சட்டம்  சொன்னாலும்  அதுவும்  தொடர்கிறது.  இது எந்த  அளவுக்கு  ஆபத்தை விளைவிக்கும்  என்பதைக்கூட  நாம்  உணர்வதில்லை.

  "ஒவ்வொரு  குப்பை  லாரியும்  குப்பையைக்  கொட்டிவிட்டு  மீண்டும்  ஊருக்கு  திரும்பும்போது,  தினமும்  நன்கு  கழுவப்பட்டு  சுகாதாரமாக  இருக்க  வேண்டும் என  வலியுறுத்துகிறது  சட்டம்.  ஆனால், இங்கே  யாருக்கு  அதைப் பற்றி  கவலை. இங்கே  குப்பை  கொட்டும்  இடங்களில்  தெரு  நாய்கள் கூட  நுழையக்கூடாது.  நூற்றுக்கும்  மேற்பட்ட  குழந்தைகள்  இங்குதான்  குப்பை  பொறுக்குகின்றனர்.  இவர்கள்  இங்கேயிருந்து  வெளியே  செல்லும்போது  குப்பைகளை மட்டுமே  எடுத்துச்செல்வதில்லை,  பயங்கரமான  வியாதிகளையும்தான்.  இதைத் தடுத்து  நிறுத்த  வேண்டிய  அரசோ  வேடிக்கைப்  பார்த்துக்கொண்டிருக்கிறது"  என  வருந்துகிறார்,  பெயர்  சொல்ல  விரும்பாத  மாநகராட்சி  ஊழியர்  ஒருவர்.

இது  வேறயா!

மருத்துவமனைகளிலிருந்து  வெளியாகும்  கழிவுகள்  பத்து  வகைகளாகப்  பிரிக்கப்பட்டு,  அவை  ஆறுவிதமான  குப்பைக்கூடைகளில்  அடைக்கப்பட்டு  அவை  முற்றிலுமாக  அழிக்கப்படவேண்டும்.  சில வகை  குப்பைகள் 900  டிகிரி  செல்சியஸில்  எரிக்கப்படவும்  வேண்டும்.  ஆனால், இன்று  பல  மருத்துவமனைகளும்  மாநகராட்சி  துப்புரவுத்  தொழிலாளர்களை  ‘கரெக்ட்’  செய்து,  எப்படியோ  பொதுக்  கழிவுகளோடு  இதையும்  கலந்துவிடுகின்றன.  இதனால்,  தொற்றுநோய்  அபாயம்  மட்டுமல்ல...  கதிர்வீச்சு  அபாயங்கள்  கூட உண்டு.  இதுபோக,  எலெக்ட்ரானிக்  கழிவுகளும்  தொழிற்சாலைக்  கழிவுகளும்கூட  பொதுக்  கழிவுகளோடு  கலக்கப்படுவதும்  தொடர்கின்றன.  இதுவும்  தடுத்து  நிறுத்தப்பட  வேண்டும்.

தீர்வுதான்  என்ன?



இதுகுறித்து,  ‘எக்ஸ்னோரா  இன்டர்நேஷனல்’  அமைப்பினை  சேர்ந்த  நிர்மலிடம்  பேசினோம்: "நாம்தான்  இதை வெறும்  குப்பைகளாக  பார்க்கிறோம்.  ஆனால், அவை  செல்வங்கள்.  அதை சரியான  வழியில்  பயன்படுத்தினால்,  நம்மால்  நிறைய  சம்பாதிக்கவும்  நம்முடைய அன்றாடத்  தேவைகளுக்கும்  உபயோகிக்க  முடியும்.  அதற்காக  கொஞ்சம்  உழைப்பும்  பொறுமையும் அவசியம்.  குப்பைகளைக்கொண்டு  பலருக்கு  வேலைவாய்ப்பை  உண்டாக்கலாம்.  நம் மின்  தேவைகளை பூர்த்தி  செய்யலாம்.  பயோ-கேஸ்  தயாரிக்கலாம்.  எரிபொருளாகவும்  பயன்படுத்தலாம்.  அவை தவிர,  மறுசுழற்சி  என்பதே  லாபகரமான  தொழில்தான்" என்றார்.

நிர்மல்  சொல்வதை  நிஜமாகவே பல  பகுதிகளில்  செய்தும்  காட்டியிருக்கிறார்.  அவர் மட்டுமல்ல,  பல  தன்னார்வத்  தொண்டு  நிறுவனங்களும்  இதை செயலில்  நிரூபித்துக்  காட்டியிருக்கின்றன.

  "வேலூர்  தங்கக்  கோயிலுக்கு  ஒவ்வொரு  நாளும் ஆயிரக்கணக்கானோர்  வந்து  செல்கின்றனர்.  இவர்களால்  உண்டாகும்  குப்பைகளை  சரியான வழியில்  உபயோகிக்க  முடிவு  செய்தது  எக்ஸ்னோரா. அங்கே  கிடைக்கும்  உணவுக்  கழிவுகள்  சேகரிக்கப்பட்டு  உரமாக  மாற்றப்படுவதோடு  அவை, சந்தைகளில்  விற்கப்படுகின்றன.  பிளாஸ்டிக்  குப்பைகள்  சேகரிக்கப்பட்டு,  அவை  சுத்தம்  செய்யப்பட்டு  மறுசுழற்சிக்காகத்  தயாராகின்றன.  இவை  தவிர்த்து  மிகச் சிறிய  அளவு  குப்பைகள்  மட்டும்  பாதுகாப்பான  முறையில்  அப்புறப்படுத்தப்படுகின்றன"  என்கிறார்,  எக்ஸ்னோரா  நிர்மல்.
‘ஹேன்ட்  இன் ஹேன்ட்’  என்னும்  அமைப்பு,  திடக்கழிவு  மேலாண்மைத்  திட்டம்  ஒன்றை, தமிழகத்தின்  பல  இடங்களில்  செயல்படுத்திவருகிறது.  இத்திட்டம்,  பிபிசி  நடத்திய உலக  அளவிலான  போட்டியொன்றில்  முதல்  மூன்று  இடங்களில்  ஒன்றைப்  பிடித்துள்ளது.  குப்பைகளின்  மூலம்  பயனடைதல்,  அதன்  மூலம் சமூக  மாற்றத்தை  உண்டாக்குதல்  என்னும்  வழியைப்  பின்பற்றி,  இத்திட்டம்  மகாபலிபுரத்தை  குப்பையற்ற  ஊராக  மாற்றியதோடு,  மாற்றத்தை  ஏற்படுத்தியும்  காட்டியுள்ளது.
தமிழகம்  முழுக்க  இத்திட்டத்தினால்  2,13,000 வீடுகள்  பலனடைந்து  வருகின்றன.  ஒவ்வொரு நாளும்  நூறு டன் குப்பைகளை  இந்த  அமைப்பு  கையாளுகிறது.  அதன் ஒரு  பகுதியாக  மகாபலிபுரத்தில்  பயோ-கேஸ் தயாரிப்பு  மற்றும்  உணவுக்  கழிவிலிருந்து  மின்சாரம்  என  விதவிதமான  திட்டங்களால்  அசத்தி  வருகின்றனர்.  மக்கும்  குப்பைகளிலிருந்து  மண்புழு  உரம்  தயாரித்தல்,  மறுசுழற்சி  செய்யக்கூடிய  பொருட்களால்  பயனுள்ள  பொருட்கள்  தயாரித்தல்  என அப்பகுதி  மக்களுக்கு  வேலைவாய்ப்பை  ஏற்படுத்திக்  கொடுத்துள்ளனர்.  மகாபலிபுரத்தில்  தயாரிக்கப்படும்  இந்த உரம்,  விகம்போஸ்ட்  என்ற  பெயரில்  சந்தைகளில்  விற்கப்படவும்  செய்கிறது.  தயாரிக்கப்படும்  பயோ-கேஸ்,  சமையலுக்கும்  பயன்படுத்தப்படுகிறது.  மின்சாரம்,  உரம்  தயாரித்தலுக்கான  தொழிற்சாலையின்  மின்தேவையைப்  பூர்த்தி  செய்கிறது.

நம்முடைய  மத்திய-மாநில  அரசுகளும்  இதுபோலவே பல  கிராமப்புறப்  பஞ்சாயத்துகளில்  எரு தயாரித்தல்  மற்றும்  குப்பைகளை  தரம்  பிரித்து  மாற்றுவழிகளில்  உபயோகித்தல்  என சில திட்டங்களின்  மூலமாக  வெற்றிகரமாக  மகளிர் சுய  உதவிக்குழுக்களின்  உதவியோடு  செயல்படுத்தப்பட்டே  வந்தாலும்  அவை வெறும் 10  சதவிகிதம்தான்.  மீதி?

  "இதற்கு  மூன்று  முக்கியக்  காரணங்கள்  உள்ளன. போதிய  விழிப்புணர்வின்மை,  இடமின்மை,  தேவையான  வசதியின்மை.  இதைத்  தீர்க்க,  மக்களிடையே  எய்ட்ஸ் குறித்த  பிரச்சாரம்  போல  முழுவீச்சுடன்  குப்பைகள்  குறித்த  ஆபத்துகளை  விளக்க  வேண்டும். குப்பைகளை  அள்ளுவதில்  தொடங்கி,  அவற்றைக்  கையாளுதல்,  அழித்தல்  வரை  சுற்றுச்சூழல்  சட்டம்  சொல்கிறபடி  செய்ய  வேண்டும்.  அரசு  தேவையான  நிதியை ஒதுக்கினாலும்  அதை சரியான  வகையில்  பயன்படுத்த  வேண்டும்.  இதை  செய்தாலே  கூட  குப்பைகளை  தவிர்க்க  முடியும்.  எங்களைப்  போன்ற  தன்னார்வத்  தொண்டு  நிறுவனங்களோடு  இணைந்தும்  மக்களை இணைத்துக்  கொண்டும்  இதை  நிச்சயமாக  சாதிக்க இயலும்"  என்கிறார்,  ‘ஹேன்ட்  இன் ஹேன்ட்’  அமைப்பின்  திடக்கழிவு  மேலாண்மைத்  திட்டத்தின்  சிவகிருஷ்ணமூர்த்தி.

  "மக்களை  மட்டுமே  குறை  சொல்லிக்  கொண்டிருக்கிறோம்.  சுகாதாரம்  பேண வேண்டிய  மருத்துவர்களும்  மருத்துவமனைகளும்  கூட ஆபத்தை  விளைவிக்கும்  பயோ-மெடிக்கல்  வேஸ்ட்டுகளை  ஏனோ தானோ  என்றுதான்  கையாளுகின்றன.  ஏன் என்றால்,  இவற்றை  அழிக்க அதிக  செலவாகும்  என்பதே. உடனடியாக  அரசு  மருத்துவமனைகளிலும்  மருத்துவர்களிடமும்  இதுகுறித்த  விழிப்புணர்வை  உண்டாக்க  வேண்டும்"  என்கிறார்,  ‘டாக்ஸிக்  லிங்க்ஸ்’  அமைப்பின்  அருண்.

தீர்வுகள்  ஆயிரக்கணக்கில்  இருந்தாலும்  அரசு பல கோடி  செலவில்  திட்டங்கள்  தீட்டினாலும்  மக்களாகிய  நம்மிடம்  முதலில்  விழிப்புணர்வு  ஏற்பட  வேண்டும்.  அண்மையில்,  தமிழக  அரசு  குப்பைகளை  தரம்  பிரிக்க  மகளிர் சுய  உதவிக்குழுக்களை  பயன்படுத்தப்போவதாக  அறிவித்திருக்கிறது.  வரவேற்கத்தக்க  முயற்சி இது.  ஆனால், பிளாஸ்டிக்  கவரில்  கெட்டுப்போன  சட்டினியோடு  குப்பைத்தொட்டியில்  வீசும்  பழக்கம் நம்மிடம்  இன்னும் ஒழியவில்லையே!

மக்களாகிய  நாம் செய்ய  வேண்டியது

*    உங்கள்  பகுதியில்  குப்பைகள்  தரம்  பிரித்து  வாங்கப்  படவில்லையென்றாலும்  தரம் பிரித்தே  துப்புரவுத்  தொழிலாளியிடம்  கொடுப்பதை  வழக்கமாக்கிக்  கொள்ளுங்கள்.
*    காலி  மனைகளில்,  சாலை  ஓரங்களில்,  கழிவுநீர்க்  கால்வாய்களில்,  நீர்நிலைகளில்  குப்பைகளைக்  கொட்டாதீர்கள்.
*    குப்பைகளை  எரிக்கவே  எரிக்காதீர்கள்.
*    கடைகளுக்கு  செல்லும்போது  துணி அல்லது  சணல் பை  எடுத்துச்  செல்லவும்.  முற்றிலும்  பிளாஸ்டிக்  பைகளை  தவிர்க்க  முயற்சி  செய்யலாம்.
*   இதையே  நாம்  பணியாற்றும்  அலுவலகங்களில்,  தொழிற்சாலைகளில்,  அருகாமை  வீடுகளில்  செய்யவும்  வலியுறுத்தலாம்.

  *    நான்  இன்னும்  அதிகமாக  செய்ய  நினைக்கிறேன்ங்க  என்பவரா  நீங்கள்...  உங்களுக்காக  இன்னொரு யோசனையும்  இருக்கிறது.  வீட்டிலேயே  செலவில்லாமல்,  அதிக  இடமில்லாமல்  எரு  தயாரிக்கலாம்.  அது மிக மிக  சுலபமானதுதான்.  ஒரு சிறிய  டிரம் அல்லது  பானை கூட  போதுமானது.  அதன் உள்ளே  மரப்பலகை  ஒன்றை  வைத்து,  அதில்  கொஞ்சமாக  மண் கொட்டி  வைத்துக்கொள்ளுங்கள்.  அதிலேயே  தினமும்  உணவுக்  கழிவுகளைத்  கொட்டிவிட்டு,  கொஞ்சமாகக்  காந்த சாணமோ  அல்லது  காந்த இலைகளையோ  போட்டு  மேலோட்டமாக  ஓரளவு  காற்றுபோகும்  வழிசெய்து,  மூடிவைத்து  விடுங்கள்.  தினமும்  இதுபோல செய்துவந்தாலே,  ஓரிரு  மாதங்களில்  அருமையான  இயற்கை உரம்  தயார். அதை  உங்கள்  வீட்டுத்  தோட்டத்திற்கோ,  பக்கத்து  வீட்டுத்  தோட்டத்திற்கோ  கொடுக்கலாம்.  விற்கலாம்.  அதோடு, வீட்டில்  சேர்க்கப்படுகிற  பிளாஸ்டிக்  குப்பைகளைத்  திரட்டி,  மொத்தமாக  காலாங்கடையில்  போட்டுவிடுங்கள்.  காசுக்கு  காசு, சுற்றுச்சூழலுக்கும்  நல்லது.  இல்லை, சாலையிலே  போட்டாலும்  ஒரு  பிரச்சினையும்  வராது.  மண்ணுக்குநல்லது.

அரசு  செய்ய  வேண்டியது

*    ஒவ்வொரு  வீட்டிலும்  அலுவலகங்களிலும்  தொழிற்சாலைகளிலும்  கட்டாயம்  மழைநீர்  சேகரிப்புத்  திட்டம்  இருப்பதுபோலவே,  இந்த  இயற்கை எரு  தயாரிக்கும்  அமைப்பும்  இருக்க  நிர்பந்திக்கலாம்.  இதன் மூலமாக  பெருமளவு  மக்கும்  குப்பைகள்  சேர்வதை  நிச்சயமாகக்  குறைக்கலாம்.
*    குப்பைகள்  எந்த  நிலையில்  வந்தாலும்  தரம் பிரித்து,  அதை  சரியான  முறையில்  கையாள  வேண்டும்.
*    குப்பைகளைக்  கையாள, நல்ல  கட்டமைப்பு  வசதிகளை  அதிகமாக்க  வேண்டும்.
*    மக்களிடையே  குப்பைகள்  குறித்த  போதிய விழிப்புணர்வினை  ஏற்படுத்த  வேண்டும்.
*    சிறிய  அளவில்  பயோ-கேஸ்  தயாரித்தல்,  குப்பைகளிலிருந்து  மின்சாரம்  தயாரித்தல்,  மறுசுழற்சி  செய்யும்  தொழிற்சாலைகளை  ஊக்குவிக்க  வேண்டும்.
*    உற்பத்தியாளர்களிடமிருந்தே  மறுசுழற்சிக்கான  நிதியைப்  பெற்று,  சரியான  முறையில்  உபயோகித்தல்.
*    நீர்நிலைகளில்  குப்பைகள்  கொட்டப்படுவதைத்  தடுத்து  நிறுத்த  வேண்டும்.
*    மருத்துவக்  கழிவுகள்  முற்றிலுமாக  சரியான முறையில்  கையாளப்படுவதோடு,  மக்கள்  பகுதிகளுக்குள்  எக்காரணம்  கொண்டு வரமால்  பார்த்துக்கொள்ள  வேண்டும்.  அவற்றினை  அழிக்கப்  போதிய நடவடிக்கைகள்  எடுக்கப்படுகின்றனவா  என தொடர்  சோதனைகள்  நடத்தி,  ஆய்வு  செய்ய  வேண்டும்.

சட்டம்  என்ன  சொல்கிறது?

பெருகிவரும்  குப்பைகளை  சரியாகப்  பயன்படுத்தவும்  அழிக்கவும்  அதைக்  கையாளவும்  அரசின் சட்டங்கள்  மிகவும்  சரியாக  இயற்றப்பட்டுள்ளன.  MUNICIPAL SOLID WASTE RULES -2000 என்கிற  சட்டம்,  நகரங்களின்  குப்பைகளை  எப்படி  அகற்ற வேண்டும்,  அவற்றை  என்ன செய்ய  வேண்டும்  என்பதை  விஞ்ஞானப்பூர்வமாக  விளக்குகிறது.  அதன்படி,
•    பயோ-மெடிக்கல்  மற்றும்  தொழிற்சாலைக்  கழிவுகளை  நகரக்  கழிவுகளோடு  கலக்காதிருத்தல்  மற்றும்  அவற்றை  வெவ்வேறு  விதமான  முறைகளில் கையாளுதல்,  அழித்தல்.
•    குப்பைகளை  எரித்தல்  தடை  செய்யப்பட்டுள்ளது.
•    தெரு  நாய்கள்  முதலான  விலங்குகள்,  குப்பைகளுக்கு  அருகில்  செல்லாமலும்  அவற்றை  கிளறி உணவு  தேடுதலையும்  தடுத்தல்.
•    மூடப்பட்ட  குப்பைத்தொட்டிகளை  அமைத்தல். அவை  நிரம்புவதற்கு  முன்பு  சுத்தம்  செய்தல். நேரடியாக  துப்புரவுத்  தொழிலாளர்கள்  அதைக்  கைகளால்  தொட்டு  உபயோகிக்காமல்,  ஆட்டோமேட்டிக்  முறையைப்  பயன்படுத்துதல்.