Thursday, February 23, 2012

தேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை ஒரு வரலாற்றுப் பார்வை

பொட்டு கட்டிவிடுதல் அல்லது தேவதாசி முறை என்று சொல்லப்படுகின்ற இந்த பழக்கம் 1947ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு விட்டது.இருப்பினும் தேவதாசி முறை தமிழ்நாட்டில் உள்ள வேலூர்,திருவள்ளூர்,விழுப்புரம் மாவட்டங்களிலும்,ஆந்திராவிலும், கர்நாடாகவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசினால்,“பேசுபவரது நாக்கு எரிந்துவிடும்என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்வர். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தனர்.ஆனால் நாளடைவில் தேவதாசிகளை மன்னர்களும்,நிலபிரபுக்களும்,முக்கியப் பிரமுகர்களும் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது இது வக்கிரமானது, அக்கிரமமும் கூட.
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிலபடித்த அறிஞர்கள், பக்தர்கள் இந்த தேவதாசி முறையை வெறுக்கதக்க ஒன்றாகக் கருதி அதனை ஒழிக்க வேண்டும் என குரலெழுப்பத் துவங்கினர். காஞ்சிபுரம் ஆரிய மிஷன் செயலர் ராமச்சந்திரன் தேவதாசி முறையை எதிர்த்து பகிரங்கமாகக்குரல் எழுப்பினார். இந்த பழக்கத்தை தடை செய்யவும், பருவமடையாத குழந்தைகள் அர்ப்பணிக்கப்பட்டால் அவர்களை பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கும் சட்டம் ஒன்றை அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு செயலர் தாதாபாய் 1912 செப்டம்பர் 18ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்என்ற பெயரில் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.
தேவதாசி ஒழிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்என காந்திஜி தனது ஹரிஜன் இதழில் எழுதினார்.இதனால் இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930-ல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.
 
சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும் கூட சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறை இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவதாசி முறை கூடாது என்று சட்டம் இருப்பதால் சம்பிரதாயம், விமர்சையாகப் பின்பற்றப்படுவதில்லை.ஆனாலும் அந்த சம்பிரதாயம் மக்களிடையே வழக்கொழிந்து போய்விடவில்லை.காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் இன்றும் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது.
தேவதாசி பெண், திருமண உறவில்லாமல் அவருக்கு பிறந்த குழந்தைகள்

தேவதாசியை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மனைவியைப் போல் நடத்தலாம். ஆனால் மற்றவர்களால் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டது. ஒர் உதாரணத்தைப் பார்ப்போம். பழனியம்மள் என்பவர் 14 ஆண்டுகாலம் ராஜன் என்பவருடன் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் உன்னை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் என்று ராஜன் பிரிந்து சென்று விட்டார். பழனியம்மாள் எந்த உரிமையும் கொண்டாட முடியாமல் அவர் இப்போது தவித்து வருகிறார். விவசாய கூலியாகப் பணியாற்றி பிழைப்பை ஓட்டி வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை மறைமுகமாகப் பின்பற்றப்பட்டு ஒரு சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.சியோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. 25 வயதான அவர் சிறுமியாக இருக்கும் போது இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அவரது பெற்றோர் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி விட்டனர். அவர் தேவதாசியாகி விட்டார். தேவதாசிகள் அனைவரின் முகப்பெழுத்தும் எம்என்பதுதான். மாரியம்மாவைக் குறிக்கும் எழுத்துதான் எம் என்பதாகும். உண்மையில் தேவதாசிகள் அனைவரின் பொதுப் பெயரும் மாரியம்மா தான்.
ராஜவேணி என்ற ஏழுவயதுச் சிறுமியும் மாரியம்மாவுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராஜவேணிக்கு விரைவில் பொட்டுக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்திலி கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ள ராஜவேணிக்கு,நித்திய சுமங்கலிசடங்கு செய்துவைக்க வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் உறுதியாக உள்ளனர். ராஜவேணிக்கு பொட்டுக்கட்டும் சடங்கை செய்து கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை.ராஜவேணிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது என்கிறார்.
கிருஷ்ணவேணி உளுந்தூர்பேட்டையில் படித்து வருகிறார்.15 வயதான அவர், அவர்களது பெற்றோருக்கு இரண்டாவது மகள்.அந்திலி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-அஞ்சலி தம்பதியினரின் மூத்தமகள் ராஜலட்சுமி ஆவார்.ராஜலட்சுமியின் கணவர் சிறுது காலத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சிலிருந்து அந்த குடும்பம் மீளவில்லை. கிருஷ்ணவேணிக்கு பொட்டுக் கட்டி விட்டால்தான் குடும்பத்துக்கு விடியல் ஏற்படும் என்று நினைக்கின்ற அளவுக்கு அஞ்சலியிடம் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் தனது இளையமகள் கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்ற முடிவுக்கு அஞ்சலி வந்துள்ளார்.அவரது கணவர் ராமகிருஷ்ணரும் இதற்கு உடன்பட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்பாராத திடீர் திருப்பமாக சமூகநல ஆர்வலர்கள் சிலர் இப்பிரச்சனையை மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் ஆஸ்டல் ஒன்றில் தங்கிப் படித்து வருகிறார்

 கடவுளின் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் கடவுளின் பணியாள் அல்லது அடிமை என்பதே தேவதாசியின் பொருளாகும். பூஜை, புனஸ்காரங்களின் போது கடவுளின் சன்னதி முன்பு நடனமாடுவதையே அவர்கள் முக்கியப் பணியாகக் கொண்டிருந்ததால் நடனமாதுஎனவும் அழைக்கப்படடனர். வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும் போது பூ வேலைப்பாடு கொண்ட ஆடையை அணிந்த நாட்டிய பெண்ணாக வர்ணிக்கிறது.
ஆகமங்களில் கணிகையர் என்று அழைக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5 -6ம் நூற்றாண்டிலேயே இம் மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்ற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என தேவராம் கூறுகிறது. காரிகையார் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறேஎன்று சம்பந்தர் பதிகம் பாடுகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர் நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்னவாசலில் உள்ள நடனமாதர் ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.
தமிழ்நாட்டில் கவனத்தில் கொள்ளதக்க நிலையில் இவர்கள் இருந்து வந்தனர். இதைப் பற்றி இடைக்கால தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் கானக் கிடைக்கும் செய்திகள் தேவதாசி முறை பற்றி விளக்குகின்றன.கி.பி.1004 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில், ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்த காலத்தில் இக்கோவிலில் பணிபுரிவதற்காக வெவ்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டு வந்து நியமித்தான். அவர்களுக்கு இரண்டாம் முறை பொட்டுக்கட்டப்பட்டது. இந்தத் தளிச்சேரிப் பெண்கள் வசிப்பதற்கென்று கோவிலை ஒட்டி மூன்று தளிச்சேரிகளை நியமித்தான். ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்களைப் பற்றிய செய்திகளைத் தருகிறது.
அதே போல, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் இது போன்ற நடனமாதுக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.பெண்கள் தேவதாசிகளாக பல்வேறு வழிமுறைகளின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செங்கல் பட்டு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், அங்குள்ள நெசவாளர்கள் தங்களது மூத்தபெண் குழந்தையை தேவதாசியாக அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.சில கர்ப்பிணிப் பெண்கள் அக்காலங்களில் தங்களுக்கு சுகப்பிரசவம் வேண்டும் என்றும், அவ்வாறு நடந்தால் தனது மூத்த பெண் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதாக வேண்டிக் கொள்வர். குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது பெண் குழந்தைகளை தேவதாசியாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு தேவதாசியாக அர்ப்பணிக்கப்படும் பெண், கோவில் நிர்வாகிகளின் தேவைகளை நிறைவு செய்து வந்தனர். அர்ப்பணம் செய்யப்படும் பெண் 6 வயது முதல் 8 வயதிற்குட்பட்டவளாக இருக்க வேண்டும். அப்பெண் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது கோயில் பூசாரி திருமனச் சடங்குகளை செய்வார். மேலும் கடவுளுக்காக/ தெய்வத்திற்காக தாலியை அப்பெண்ணின் கழுத்தில் அணிவிப்பார். அதன் பின்னர் நட்டுவன் அல்லது நடன ஆசிரியர் அப்பெண்ணுக்கு இசை மற்றும் நாட்டியம் கற்றுக் கொடுக்கத் துவங்குவார்.
தேவதாசி சமூகம் பொதுவாக மூத்த பெண் குழந்தைகளை தேவதாசியாக அர்ப்பணம் செய்துவிட்டு மற்றவர்களை அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனமுடிப்பர் அல்லது அவர்கள் தேவதாசியாக மாற அனுமதிப்பார்கள் தேவதாசிக்கு பெண் குழந்தை இல்லையெனில் தங்களது உறவினர்களிலிருந்து தத்தெடுப்பர் அல்லது அவளது சாதிலிருந்து அல்லது பிற சாதிலிருந்து விலைக்கு வாங்கி அர்ப்பணிப்பார்கள்.
20 ஆம் நூற்றாண்டில் தேவதாசி தடைச் சட்டம் தமிழகத்திற்கு முன்பாக லாகூர்,டெல்லி,ஆக்ரா,பேஷவார் போன்ற பகுதிகளில் நடைமுறைக்கு வந்ததால். அங்கிருந்தவர்கள் தேவதாசிமுறை அனுமதிக்கப்பட்ட பிற நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதன்மூலம், பெரும்பாலான பெண்கள் சென்னையிலுள்ள பைகிராஃப்ட்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, முஹம்மது ஹுசைன் தெரு மற்றும் பக்சின் அலி தெரு போன்ற பகுதிகளில் குடியேறினர்.
1927-இல் 20,000 தேவதாசிகள் சென்னையில் குடியேறியதுடன் தங்களுக்கென சங்கமும் துவக்கினர். தங்களை இத்தொழிலில் ஈடுபடுத்தியவரை அந்த சங்கம் கடுமையாக கண்டித்தது. அவர்கள் மீது குற்றம் சுமத்தியது. டாகடர் முத்துலெட்சுமி ரெட்டி இச்சமூகத்துடன் இணைந்து இக்கேடுகெட்ட நடைமுறையை எதிர்த்து குரலெழுப்பினார்.இதனை ஒழிப்பதற்காக கடுமையாக போராடி சட்டமன்றத்தில் குரலெழுப்பினார். இதற்காக சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்தினார். தேவதாசி முறையை எதிர்த்து இந்திய மாதர் சங்கமும்அவர்களது அதிகாரப்பூர்வ ஏடான ஸ்தீரீ தர்மாவும்பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
1927-இல் இந்த சங்கங்கள் டாக்டர் ரெட்டியை இது குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்ரும்படி வற்புறுத்தின. அதேவேளை, ஜூலை 8,1927-இல் சிதம்பரத்தில் சிங்கராம் பிள்ளை தலைமையில் தேவதாசிகள் மாநாடும் நடைபெற்றது. மற்றுமொரு மாநாடு செளத்ரி V.கோனம்பாள் தலைமையில் நவம்பர் 2,1927-இல் கோவையில் மணிமேகலை சங்கம் சார்பாக நடத்தப்பட்டுள்ளது.
சென்னை சட்டமன்றத்தில் நவம்பர் 4, 1927-இல் டாக்டர் ரெட்டி கோயில்களில் தவறான காரியங்களுக்காக இளம்பெண்களும், சிறுகுழந்தைகளும் தேவதாசியாக அனுமதிக்கப்படுவதை எதிர்த்து சட்டமியற்ற முன்மொழிந்த போது தேவதாசிகளில் ஒரு பகுதியினர் அதனைக் கடுமையாக எதிர்த்த கூத்தும் நடந்தது. இத்தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னை மற்றும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள தேவதாசிகள் இதனை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தினர்.
தேவதாசிகளின் பெருமையை உணர்த்தும் வகையில் டாக்டர் ரெட்டியின் தீர்மானத்திற்கு எதிராக T.துரைக் கண்ணம்பாள் என்ற சென்னை தேவதாசிகளின் அமைப்பின் செயலர் தலைமையில் எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேவதாசிகளின் நினைவாக, “தேவதாசி நினைவு 1927” என்றழைக்கப்பட்ட மாதிரி நினைவூட்டு சென்னை அரசின் சட்ட உறுப்பினர் சி.பி. ராமசாமி அய்யரிடமும், வளர்ச்சித்துறை அமைச்சர் ரெங்கநாத முதலியாரிடமும் அளிக்கப்பட்டது.
இறுதியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் அஞ்சாமை மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாக இந்த சட்டம்,பிப்ரவரி 1,1929-இல் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் சென்னை ஹிந்து அறநிலையத்துறைச் சட்டம் 1929” என அழைக்கப்பட்டது.
இருப்பினும் தேவதாசி முறையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930- இல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.
60 வருடங்களுக்கு முன்பே சட்டமியற்றி தடுக்கப்பட்டிருத்தாலும் இன்றும் இம்முறை தொடர்வதை .....................

No comments:

Post a Comment