Tuesday, February 21, 2012

மலேசியாவில் மங்காத்தா

லேசியாவில் ஒரு வாகன விபத்து. சம்பவ இடத்தில் நானும் என் மலேசியா நண்பனும் இருந்தோம். எங்கள் கண்களுக்கு முன்பு மோதிய இரு வாகனங்களும் சாலையில் சிதைந்து கிடந்தன. சாலையில் இருபுறத்தில் இருந்தவர்களும் வாகனங்களை நோக்கி ஓடி வந்தார்கள். நாங்களும் தான். சரியான கூட்டம் வாகனத்தைச் சுற்றி.

மலேசியா மக்களுக்கு என்ன ஒரு மனிதாபிமானம்! வாகன விபத்து நடந்தவுடன் காப்பாற்ற, முதலுதவி செய்ய இப்படி கூடிவிட்டார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே... அந்த நினைப்பில் என் நண்பன் மண்ணை அள்ளிக் கொட்டினார். வாகன நம்பரை குறித்துக் கொண்டிருந்தவரிடம்,



'ஆம்புலன்ஸுக்கு போன் பண்ண‌வா?' இல்லை.
'அப்புறம் எதற்கு?' சூதாட.
'சூதாடாவா? என்ன சொல்றீங்க?!' ஆமா, எந்த கார் மோதுதோ அந்த கார்களின் நம்பரை தாய்லாந்து நம்பர் லாட்டரியில் எழுதினால் பரிசு கிடைக்கும். இது அதிர்ஷட நம்பர். இன்னொரு அதிர்ஷ்ட நம்பரும் இருக்கு. அதாவது இங்கு இரண்டு கார்கள் அடிபட்டிருக்கு, இதில் கிடைப்பது நம்பர் இரண்டு (2), முதல் காரில் அடிப்பட்டது ஒரு ஆள் (1), இரண்டாவது காரில் அடிபட்டவர்கள் மூன்று பேர் (3), இப்பொழுது அந்த அடைப்புக்குறிக்குள் உள்ள இலக்கங்களை இணைக்கவும். மொத்தம் 213. இந்த மூன்று இலக்க நம்பரை எழுதினால் கண்டிப்பாக பரிசு கிடைக்கும். சாலையில் போகிற கார்களில் இந்த கார் மட்டும் ஏன் அடிபடவேண்டும்? மற்ற கார்கள் ஏன் அடிபடவில்லை? அதனால் இந்த நம்பர் கண்டிப்பாக ஏறும் என்று விளக்கினார் அந்த சிந்திக்காத அறிவிலி!

213 என்ற நம்பரை 10 வெள்ளிக்கு எழுதினால் நம்பர் அப்படியே விழுந்தால் 4000 (ரிங்கிட்) வெள்ளிகள். 100 வெள்ளிக்கு எழுதினால்.. இப்படி கணக்கு போட்டுக் கொண்டு வந்தவர்களில் முக்கால்வாசி பேர் பேனாவில், மொபைலில் கார் நம்பரையும் அடிபட்டவர்களின் எண்ணிக்கைகளையும் குறித்துக் கொண்டிருந்தனர்.
<><><><> <><><><> <><><><> <><><><> <><><><>


இது 3 இலக்க நம்பர் ஷாட்


இத ஒரு மாதிரியாக கூட்டி, பெருக்கி


நம்பரை மாற்றி மாற்றி எழுதுவார்கள்.
சிலர் காப்பாற்ற ஓடி வந்தது உண்மைதான். ஆனால் அரைகுறை உண்மை. “முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள்” என்பதை விளங்கிக் கொண்டேன்! பணத்தாசையும் மூடநம்பிக்கையும் ஒன்று சேர்ந்து இவர்களின் இரக்க உணர்ச்சியை, மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்துவிட்டதே என்று ஆதங்கப்பட மட்டுமே என்னால் முடிந்தது.







தாய்லாந்து லாட்டரி எனும் சூதாட்டம் மலேசியா அரசின் அனுமதியோடும் முழு ஆதரவோடும் நடக்கும் ஒரு தீமையான வியாபாரம். இதற்கென பிரத்யேகமாக கடைகள் இருக்கின்றன. நாம் வாங்கிய சூதாட்ட லாட்டரி சீட்டு முடிவுகளை அறிய எங்கும் போக தேவையில்லை. சிக்னலில் நிற்கும்போது சிக்னலில் இருக்கும் பெரிய மானிட்டரில் இன்றைய சூதாட்ட லாட்டரி சீட்டு முடிவுகள் ஓடும். ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு முன்னால் இன்றைய லாட்டரி முடிவுகள் திரையில் தெரியும்.


<><><><> <><><><> <><><><> <><><><> <><><><>
மலேசியாவில் நம்பர் லட்டரி கடை
<><><><> <><><><> <><><><> <><><><> <><><><>
இதுவும் சூதாட்டக் கடைதான்
இந்த நம்பர் எழுதுபவர்கள் இதற்கு அடிமையாகி ஒருவிதமான மனநோயாளியாக ஆகிவிடுகின்றனர். இவர்களின் சிந்தனை முழுவதும் நம்பரில்தான் இருக்கும்.மொபைல் புதிதாக வாங்கினால் அந்த மாடல் நம்பரை எழுதுவார்கள். அவர்களின் மொபைல் நம்பரின் கடைசி மூன்று நம்பரை எழுதுவார்கள். புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானால் அவரின் பெயரைக் கேட்டு அந்த பெயரின் கூட்டு நம்பரை எழுதுவார்கள். கிரிக்கெட் விளையாட்டின் இறுதி ரன்களின் மொத்த எண்ணிக்கையை எழுதுவார்கள். இவ்வளவு ஏன், இங்கு நான் கொடுத்திருக்கிற நம்பரை சூதாட்ட பைத்தியங்கள் பார்த்தால் இதையும் எழுதுவார்கள்.

இந்த சூதாட்டத்தின் விளைவாக அமைதியிழந்த குடும்பங்கள், நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் இவர்களை வாழும் சாட்சியாக நான் பார்த்திருக்கிறேன்.
ஏன் இங்குள்ள மலேசியர்கள் சாமி கும்பிடும்போது அவர் முதலில் வைக்கிற கோரிக்கையே 'சாமி! எனக்கு தாய்லாந்து லாட்டரி விழணும்' என்றுதான் இருக்கும்.
மலேசியாவில் தம்பிரான் சுவாமி என்பவர் பேட்டி கொடுக்கும்போது "கடவுள்கிட்ட போயி வழிபாடு செய்றவங்க, 'எனக்கு லாட்டரி டிக்கட் விழணும், காடி வாங்கணும், வீடு கட்டணும்' அப்படின்னுதான் வேண்டிக்கிறாங்க. அதுக்கு அஞ்சு காசு கற்பூரத்தைக் காட்டி, தேங்காய் உடைத்து சாமிக்கிட்ட பேரம் பேசுறாங்க" இப்படி மலேசியர்களின் ஆன்மாவை உலுக்கி கேள்வி கேட்டார்.
இதைவிட கொடுமை மலேசியாவில் 1999 ல் நடந்த மனதை உலுக்கிய உண்மை சம்பவம். நகரின் ஒதுக்குப்புற காளி கோவிலில் கொடூரமாக வயிற்றை கிழித்து கொல்லப்பட்டு, குடல்களை காளியின் சிலையில் மாலையாக்கிய நிலையில் ஒரு சிறுமியின் பிணம் கிடைத்தது. போலீஸ் பல மாதங்கள் தேடி கண்டுபிடித்ததில் இந்த கொலையை செய்தவர் பத்ரகாளியின் பக்தர்; அப்படியே சூதாட்டத்தின் தீவிர பக்தர்; அவரின் கனவில் தோன்றிய காளி, 'மகனே! வயது வராத ஒரு சிறுமியின் வயிற்றைக் கிழித்து, குடலை வெளியே எடுத்து, மாலையாக என்னுடைய சிலையின் கழுத்தில் போடு; உனக்கு சூதாட்ட லாட்டரியில் 10 லட்சம் ரிங்கிட் விழும்' என்று சொல்ல இவரும் 'அதுபோலவே சிறுமியைக் கடத்திக் கொன்றேன்' என்று போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
சிவகங்கையைச் சேர்ந்த மைதீன் என்பவர் மலேசியாவிற்கு என்னைப் போல பிழைப்புக்காக வந்தவர். மலேசியா வந்த புதிதில் வெள்ளந்தியாக திரிந்தவர் ஒருமுறை நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, 'அண்ணே.. பெப்ஸி குடிக்கணும், எங்கே வாங்கலாம்?' என்று கேட்டார். நாங்க பெப்ஸி தானியங்கி இயந்திரத்தைக் கைக்காட்டி அதில் ஒரு வெள்ளியை போடுங்கள், பெப்ஸி இயந்திரத்தின் அடியில் விழும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது, 'அண்ணே.. கேலி பண்ணாதீங்கே, அது எப்படி காசு போட்டா பெப்ஸி விழும்?' என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தவர்.
எப்படியோ கெட்ட தொடர்பு ஏற்பட்டு, சூதாட்ட லாட்டரி அறிமுகம் கிடைத்து முதலில் விளையாட்டாக 4 வெள்ளிகளுக்கு எழுதினார். அதில் உல்டா நம்பராக 500 வெள்ளி என்று நினைக்கிறேன் பரிசு விழுந்தது. மனமகிழ்ந்துப் போன அவர் நண்பர்களுக்கு பீர் பார்ட்டி வைத்தார். மலேசியாவில் என்னைத் தவிர அனைத்து நண்பர்களும் அங்கு குடிக்கக் கூடியவர்கள். என்னையும் வற்புறுத்தினார்கள், 'அடே இது சாராயம் இல்லை, பீர்தான்; அதுவும் இந்த கின்னஸ் பீரில் 8 சதவீத ஆல்கஹால்தான் சேர்த்து இருக்கிறார்கள்' என்றெல்லாம் கூறி குடிக்கவைக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள்.
அதன்பிறகு அவர் நம்பர் எழுதுவதில் மூழ்கிப்போனார். கொஞ்சமாக எழுத ஆரம்பித்து முழு சம்பளத்தையும் எழுத ஆரம்பித்தார். ஊருக்கு பல மாதங்கள் பணம் அனுப்பாமல் மனைவியும் குழந்தைகளும் அங்கு பட்டினி. அவர்கள் சாப்பாட்டு செலவிற்காக ஊரைச் சுற்றி அவர் மனைவி கடன் வாங்கி பல மாதங்களை சமாளித்து இவரை அனுப்பச்சொல்லி போன் பண்ணும்போதெல்லாம், விதவிதமான பொய்க் காரணங்களை சொல்லி தவிர்த்தார். நண்பர்கள், 'ஏன் இப்படி பொய் சொல்கிறாய், வீட்டுக்கு பணம் அனுப்பித் தொலை' என்று சொல்லும்போதெல்லாம், 'இல்லை ஹைதர்.. போனமுறை ஒரு நம்பரில் போச்சு. இந்த முறை சரியான நம்பர் எழுதி இருக்கிறேன். அவ வாங்குன மொத்த கடனையும் அடைச்சிடலாம்' என்று சொல்லியே போலீஸில் பிடிபடும்வரை ஊருக்கு பணமே அனுப்பவில்லை. ஊருக்கு போகும்போது பெரும் கடன்காரனாய் போய்ச் சேர்ந்தார்.
இங்கு மலேசியா நாடு சட்டப்படி அனுமதிக்கிறது. இங்குள்ளவர்கள் தெரிந்தே நாசமாகப் போகிறார்கள். ஆனால் நான் தற்போது வேலைப் பார்க்கும் சவூதியில் இதே சூதாட்ட அடிமைகள் இருக்கிறார்கள். இங்கு சட்டப்படி அனுமதி இல்லை. ஆனாலும் இங்கு கள்ளத்தனமாய் சூதாட்ட தாய்லாந்து லாட்டரி எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள் ஆதாரங்களுடன் விபரமாக

சவூதியில் மங்காத்தா (கள்ளசூதாடிகள்) என்ற பதிவில் இன்ஷா அல்லாஹ் விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment